திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்.. பெண் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு நால்ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தவர் மகேஸ்வரி (35). அவரது கணவர் சுப்பிரமணி. இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.
இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் இறந்ததால் போட்டோ ஸ்டூடியோ வைத்து குழந்தைகளை வளர்த்து வந்த மகேஸ்வரி இன்று இரு சக்கர வாகனத்தில் சாலையூர் நால்ரோட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியதில் மகேஸ்வரிக்கு தலையில் அடிப்பட்டது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார்.. சென்னைக்கு பணியிட மாற்றம்.. புதிய பொறுப்பு!
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் சொந்த ஊரான சுள்ளெறும்பு நடுப்பட்டிக்கு கொண்டுவரப்படுகிறது.
ஏற்கெனவே தந்தையை இழந்த இரு குழந்தைகளும் தற்போது தாயையும் இழந்து தவித்து வருவது சுள்ளெரும்பு நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.