கல்யாணம் பண்ணிக்கோனு சதா நச்சரிப்பு.. காதலியை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இளம்பெண்ணை காதலனும் அவரது கூட்டாளியும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த 5-ஆம் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண் கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ ஆவார்.
தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வேலை சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகாரின் பேரில் போலீஸார் ஜெயஸ்ரீயை தேடி வந்தனர்.
பெண்ணின் செல்போன் ஆய்வு
இந்த நிலையில் அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஒரே நாளில் ஒரே எண்ணிற்கு ஜெயஸ்ரீ 20-க்கும் மேற்பட்ட தடவை பேசியது தெரியவந்தது. அந்த எண்ணை போலீஸார் ஆய்வு செய்தனர்.
தங்கதுரை
அபபோது அது ஜெயஸ்ரீயுடன் வேலை பார்த்து வந்த தங்கதுரையின் எண் என்பது தெரியவந்தது. விசாரணையில் ஜெயஸ்ரீயும் தங்கதுரையும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் ஜெயஸ்ரீயை கண்டித்தனர். இதையடுத்து அவர் தங்கதுரையுடன் வெளியே சென்றுவிட்டார்.
ஜெயஸ்ரீ
அவர்களுடன் ஜெகநாதன் என்ற சக ஊழியரும் சென்றுள்ளார். ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் மூவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் விஷயம் தெரிந்து விட்டதால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கதுரையும் ஜெகந்நாதனும் சேர்ந்து ஜெயஸ்ரீயை கொலை செய்தனர்.
போராட்டம்
இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த நூற்பாலை வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்து விட்டனர். இருவர் கைது செய்யப்பட்டபின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. ஜெயஸ்ரீயை திருமணம் செய்ய மறுத்தது ஏன் என விசாரணை நடத்தப்படுகிறது.