"அய்யா பூபதி".. ஈரோட்டில் மாயமாகி குமரியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர்!
கன்னியாகுமரி: ஈரோட்டில் மாயமான இளைஞர் ஒருவர் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த போது நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியரான செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவரது மகனான பூபதிராஜா (29) டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து விட்டு, சென்னையில் வேலைபார்த்து வந்தார்.
மன அழுத்தம்
சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான பவானிசாகரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தந்தையின் மரணம் பூபதிராஜாவை மனரீதியாக பாதித்தது. பின்னர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25- ம்தேதி பூபதிராஜா திடீரென மாயமானார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
சுற்றுலா வந்த நண்பர்கள்
பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பூபதிராஜாவின் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, கன்னியாகுமரியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
காவல்நிலையத்தில் விசாரணை
அப்போது, சாலையில் நடந்து செல்பவர் பூபதிராஜாவை போல் இருக்கிறது என்று அவரை பூபதி என்று அழைத்துள்ளனர். உடனே பூபதிராஜா திரும்பி நின்று கூப்பிட்டவர்களை பார்த்துள்ளார். இது பூபதிராஜா தான் என்று உறுதிபடுத்திய அவர்கள் பூபதிராஜாவை காரில் ஏற்றிக்கொண்டு நேராக கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினருக்கு தகவல்
இதனையடுத்து போலீசாரும் பூபதியின் குடும்ப உறுப்பினர்களும் அவரிடம் பேசும் போது கஜினி படத்தில் சூர்யாவுக்கு பழைய சம்பவங்கள் மறந்தது போல அனைத்தும் மறந்து போய் மாற்றி மாற்றி பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஈரோட்டில் உள்ள பூபதிராஜாவின் குடும்பத்தினருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
இளைஞர் மீட்பு
சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன குடும்ப இளைஞரை சந்தித்து காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.