திமுகவுக்கு ஆறுதலைத் தரும் எடப்பாடியின் தகுதி நீக்க ' கணக்கு' ஆயுதம்!
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம் தங்களுக்கு சாதகம் என மகிழ்கின்றன திமுக வட்டாரங்கள்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது, வழக்கு நீடிப்பது, தேர்தல்களே நடத்தாமல் இழுத்தடிப்பது, சட்டசபையில் பெரும்பான்மையே கோருவது இல்லை... இவைதான் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் கண்டு வந்த காட்சிகள்.
இப்போது ஒருவழியாக சட்டசபை இடைத்தேர்தல்கள் அனைத்தும் நடைபெற்று அதிகாரம் அதிமுகவிடமே நீடிக்கப் போகிறதா? திமுக வசமாகுமா? என்கிற கிளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் மீண்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் என்கிற கணக்கு விளையாட்டை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 234. அனைத்து இடைத்தேர்தல்களும் நடைபெற்று முடிவடையும் போது அதிமுகவுக்கு 118 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதனால் இடைத்தேர்தல்களில் அதிமுக 12 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.
2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி
திமுக அணிக்கு 97 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இடைத்தேர்தல்களில் 21- தொகுதிகளில் வென்றால்தான் திமுகவுக்கு அரியாசனம் கிடைக்கும்.
இந்நிலையில் தமது அரசுக்கு பாதுகாப்பு என கருதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைக்கு முனைந்துள்ளார் முதல்வர் எடப்பாடி. 4 எம்.எல்.ஏக்களை நீக்கிவிட்டால் சட்டசபையின் பலம் 230. பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். இடைத்தேர்தல்களில் 10 இடங்களில் வென்றால் போதும்... ஆட்சிக்கு ஆபத்து இல்லை இதுதான் முதல்வர் எடப்பாடியின் கணக்கு.
அதே நேரத்தில் 21 தொகுதிகளில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்த திமுகவின் சுமையை சற்று இறக்கி வைத்திருக்கிறது எடப்பாடியின் கணக்கு. சட்டசபையில் 230 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் இடைத்தேர்தல்களில் திமுக 19 இடங்களில் வென்றால் ஆட்சி மாற்றம் உறுதி என்கிற நிலை உருவாகும். 21 தொகுதிகளில் ஜெயித்தாக வேண்டுமே என மலைப்பாக பார்த்த திமுகவினருக்கு எடப்பாடியின் இந்த புதிய கணக்கு ஒரு ஆறுதலைத் தந்துவிட்டது.