துபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு
துபாய்: துபாயில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டிற்கு சென்று விட்டு, துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இன்னும் 5 நிமிடத்தில் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும் என்ற நிலையில், துபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து, சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு துபாய் ஷேக் ராசித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வரும், 5 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் பலியான 12 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேரந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து, இந்தியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகிறது. உயிரிழந்த 12 பேர்களின் பெயர்களைத் துணைத் தூதரக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
1. விக்ரம் ஜவஹர் தாக்கூர்
2. விமல் குமார் கார்த்திகேயன் கேசவபிள்ளைகர்
3. கிரண் ஜானி
4. பெரோஷ் கான்
5. ரேஷ்மா பெரோஷ் கான்
6. உம்மர்
7. நபில் உம்மர்
8. வாசுதேவ் விஷான்தாஸ்
9. ராஜன் கோபாலன்
10. பிரபுலா மாதவன் தீப குமார்
11. ரோஷினி
12. ஜமாலுதீன்
பேருந்து ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலையில் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களுக்கு உதவுவதற்காக சஞ்சீவ் குமார் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். உதவிகள் தேவைப்படுவோர், +971- 504565441 என்ற எண்ணுக்கும் உதவி மையம் எண், +971- 565463903-க்கும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.