குவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்!
துபாய்: உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2788 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 78824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆனால் இது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் எப்படி
மத்திய கிழக்கு நாடுகளில் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் இந்த வைரஸ் பரவியது. அதன்படி ஜனவரி 29ம் தேதி அங்கு நான்கு பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது . இவர்கள் நான்கு பேரும் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சில நாட்களில் அங்கு புதிதாக 9 பேருக்கு இந்த வைரஸ் பரவியது. அதேபோல் எகிப்தில் அதற்கு மறுநாளே ஒரு நபருக்கு இந்த வைரஸ் தாக்கியது.
ஈரான் வைரஸ்
பின் பிப்ரவரி 19ம் தேதி ஈரானில் இந்த வைரஸ் இரண்டு பேருக்கு பரவியது. தற்போது ஈரானில் வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 112 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
லெபனான் வந்தது
அதேபோல் லெபனானில் இதேபோல் பிப்ரவரி 21ம் தேதி இந்த வைரஸ் தாக்கியது. ஈரானில் இருந்து இந்த வைரஸ் அங்கு பரவியது. பின் பிப்ரவரி 24ம் தேதியே குவைத்தில் வைரஸ் பரவியது. அதே நாள் ஆச்சர்யமாக பஹ்ரைன், ஈராக், ஓமான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 9 நாடுகள் உள்ளது. இவை எல்லாம் எண்ணெய் வள நாடுகள்.
7 நாடுகளில் பாதிப்பு
இந்த 9 நாடுகளில் மொத்தம் 7 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்தாரில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கத்தாரில் நிறைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள்
கத்தார் கொஞ்சம், கொஞ்சமாக அண்டை நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தி வருகிறது. முக்கியமாக ஈரானுக்கு விமான போக்குவரத்தை 5 மத்திய கிழக்கு நாடுகள் இதுவரை நிறுத்தி உள்ளது.அதேபோல் ஈராக் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்குமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. வெளியே மக்கள் கூடுவதற்கும் தடை விதித்துள்ளது. ஈரானில் உள்நாட்டு போக்குவரத்தை தடா செய்துள்ளனர் .
இந்தியர்கள் நிலை
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் தமிழர்கள், மலையாளிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் யாரும் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று செய்தி வெளியாகவில்லை. ஆனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால், பல லட்சம் இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருக்கும் தமிழர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.