கொரோனா.. இரவில் மட்டும் ஊரடங்கு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரடி கட்டுப்பாடு!
கொரோனா வைரஸ் காரணமாக இன்று இரவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு நேரத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:கொரோனா வைரஸ் உலகம் முழுக்க எப்படி பரவி வருகிறதோ அதேபோல் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா காரணமாக 333 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
அங்கு கொரோனா பாதிப்பு தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு மக்கள் பொது இடங்களில் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மக்கள் கூட்டமாக செல்வதும், அதிக வாகனங்கள் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை அங்கு போலீசார் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு அமலில் இல்லை.
இந்த நிலையில் இன்று இரவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு நேரத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அங்கு நாடு முழுக்க சுத்தப்படுத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளது.
அனைத்து பொது இடங்கள், டிராம்கள், ரயில்கள் எல்லாம் சுத்தப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
இதில் மக்கள் யாரும் வெளியே வர கூடாது. மெட்ரோ ரயில்கள், டிராம்கள் இயங்காது. ஆனால் தனியார் வாகனங்கள், டாக்சிகள், மற்ற வாகனங்கள் இந்த நேரத்தில் இயங்கலாம். இந்த விதிகளை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.