முகமது ஷமி.. அவர்களை மன்னித்து விடுங்கள்.. ராகுல் காந்தி ட்வீட்! கிரிக்கெட் வீரர்களும் கொந்தளிப்பு
துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது தொடர்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில நெட்டிசன்களால் மதரீதியாக, விமர்சனக் கணைகளுக்கு உள்ளான நிலையில் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் ஒருசேர முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி கொண்டது. அதாவது, ஒரு விக்கெட்டை கூட இந்திய பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியவில்லை.
இதற்கு முக்கியமான காரணம், துபாய் மைதானத்தில் இரவு அதிக அளவு பனி விழுந்ததுதான் .
ரிசர்வ் டே.. நாக்-அவுட்.. எப்படி நடக்கப்போகிறது டி20 உலக கோப்பை.. முழு விவரம்!
ட்யூ காரணம்
பனி காரணமாக பந்துவீச்சாளர்கள் நினைத்த இடத்தில் பந்தை வீச முடியவில்லை, கைகளிலிருந்து பந்து வழுக்கிக் கொண்டு சென்றது. யார்க்கர் போட நினைக்கும் போது அது புல்டாஸ் ஆக மாறி சென்றது. சில நேரங்களில் நினைத்ததை விட அதிகம் லெக் சைடில் சென்றது. இதனால் எளிதாக பாகிஸ்தான் வீரர்கள் ரன் அடித்தனர். விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. ஆனால் முகமது ஷமி பந்துவீச்சு இருப்பதிலேயே அதிகமாக அடி வாங்கியது.
யார் எவ்வளவு ரன்கள்
புவனேஸ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்தார். பும்ரா 3 ஓவர்கள் வீசிய 22 ரன்கள் கொடுத்தார். வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்தார். முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் வழங்கினார். இதன் காரணமாகத்தான் முகமது ஷமியின் மீது நெட்டிசன்கள் கோபம் திரும்பியுள்ளது. ஆனால் அது சாதாரண விமர்சனமாக இல்லாமல் மதரீதியான விமர்சனமாக இருக்கிறது.
முஸ்லீம்
முகமது ஷமி ஓர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்று கூறும் அளவுக்கு மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் கொதித்துப் போன முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து முகமது ஷமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இர்பான் பதான்
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது நானும் அணியில் இருந்துள்ளேன். அப்போதும் இந்தியா தோற்று இருக்கிறது. ஆனால் என்னை நீங்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் நான் பேசுவது சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவை. இது போன்ற முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்.
வீரேந்திர சேவாக்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முகமது ஷமி மீது நடத்தப்படும் ஆன்லைன் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவரோடு துணை நிற்கிறோம். அவர் ஒரு சாம்பியன். யார் ஒருவர் இந்திய அணியின் தொப்பியை தங்கள் தலை மீது சூட்டுகிறார்களோ அவர்கள் இந்திய நாட்டை தங்கள் இதயத்தில் ஏந்தி நிற்கிறார்கள் என்று அர்த்தம். எந்த ஒரு ஆன்லைன் கும்பலை விடவும் அவர்களுக்கு தேசப்பற்று அதிகம் . உங்களோடு இருக்கிறோம் ஷமி. இவ்வாறு வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முகமது ஷமி நாங்கள் உங்களை காதலிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வீரர். நாங்கள் அவருக்காக பெருமைப்படுகிறோம் . பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்காக அவரை குறி வைப்பது மோசமான செயல் என்று தெரிவித்துள்ளார்.
லட்சுமணன்
முன்னாள் கிரிக்கெட் பிரபலமான, விவிஎஸ் லட்சுமணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் , பதிவில் சுமார் எட்டு வருடங்களாக இந்திய அணிக்கு மிகச் சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார் முகமது ஷமி. பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் அவர். ஒரே ஒரு போட்டியை வைத்து அவரது திறமையை மதிப்பீடு செய்யக்கூடாது . அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கிறது. ரசிகர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் முகமது ஷமி மற்றும் இந்திய அணிக்கு இப்போது உங்கள் ஆதரவு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ஆதரவு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முகமது ஷமி நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மக்கள் வெறுப்பால் நிரப்பப்படுகிறார்கள், ஏனென்றால் யாரும் அவர்களுக்கு எந்த அன்பையும் கொடுக்கவில்லை. அவர்களை மன்னியுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.