வெற்றி, வெற்றி.. அழிக்க முடியாத அவப்பெயரை தவிர்த்து விட்டது சிஎஸ்கே.. ஆர்சிபி அளவு மோசமில்லை!
சார்ஜா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று சிஎஸ்கே அணி என்னதான் மகா மட்டமாக ஆடினாலும், வெற்றி, வெற்றி என்று ரசிகர்கள் துள்ளாட்டம் போட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.
அது 2017 ஆம் ஆண்டு. கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 131 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கு என்று இறுமாப்புக் கொண்டு இருந்தது ஆர்சிபி அணி.
ஆர்சிபி அணி பரிதாபம்
ஆனால் அதன்பிறகுதான் விபரீதம் ஆரம்பித்தது. சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. வெறும் 49 ரன்களில் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆல் அவுட் ஆனது.
விராட் கோலி டக் அவுட்
விராட் கோலி, தான் சந்தித்த முதல் பந்தில் அவுட்டானார். டிவில்லியர்ஸ் 8 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோர் என்றால் அது 49 தான். இந்த சா(வே)தனையை எந்த அணியும் இதுவரை முறியடிக்கவில்லை. முறியடிக்க எந்த அணியும் விரும்புவதும் கிடையாது.
மட்டமான பேட்டிங்
ஆனால் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தோனி உட்பட அனைவரும் வேகமாக நடையைக் கட்டி விட்டனர். தோனி முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தார் ஒரு சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். ஆனாலும், 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விட்ட நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரித்து விட்டது. 49 ரன்களை கடந்து விட்டால் போதும், அல்லது காலத்துக்கும் மாற்று அணி ரசிகர்கள் சிஎஸ்கே அணியை கிண்டல் செய்த வைத்துக் ஓட்டி விடுவார்கள் என்ற பதற்றம் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது.
வெற்றி, வெற்றி
இதனால், சென்னை அணிக்கு இன்று டார்கெட் 49 ரன்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட் டனர் சிஎஸ்கே ரசிகர்கள். நல்ல வேளையாக சாம் கர்ரன் ஒரு சூப்பர் சிக்சர் அடிக்க 49 ரன்களை கடந்தது சிஎஸ்கே. இதை பார்த்ததும் வெற்றி வெற்றி என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். எத்தனை வேதனைக்கு நடுவில், ஒரு ஆறுதலாக 49 ரன்களை கடந்தது அமைந்தது என்றால் அது மிகை கிடையாது.
ஸ்பார்க் இல்லை
அதேநேரம் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று பிளை ஆப் செல்லப் போவதாக சவடால் விட்டீர்கள். இப்போது 49 ரன்களை கடப்பதற்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறீர்களே என்று பிற அணி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஓவராக ஓட்ட ஆரம்பித்து விட்டனர். என்ன செய்ய? "அதான் தல சொல்லிவிட்டாரே. ஸ்பார்க் இல்லைப்பா" என்று முகத்தை மூடிக் கொண்டனர் சிஎஸ்கே ரசிகர்கள்.