இதுதான் சிஎஸ்கே.. ஆர்சிபியை அலறவிட்ட அதே கெத்து.. ஆனா, பிளேஆப் போச்சே!
துபாய்: இதுதான் சிஎஸ்கே.. அத்தனை அணிகளும் பார்த்து பயப்படும் அந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இதுதான்.. என்று புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இத்தனைக்கும் காரணம், சென்னை அணி தனது வழக்கமான பாணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நேற்று புரட்டியெடுத்து விட்டதுதான்.
சிஎஸ்கே அணியா இது என்று நினைக்குமளவுக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி, தவழ்ந்து கொண்டு இருந்தது தோனி படை.
சிஎஸ்கே வியூகங்கள்
முரளி விஜய், வாட்சன், கேதர் ஜாதவ் என அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரராக வெளியில் உட்கார வைத்து வேறு வீரர்களை மாற்றி மாற்றி பார்த்தபோதும், முடியவில்லை, தோனி முன்கூட்டியே களத்துக்கு வந்து பேட் செய்து முயன்று பார்த்தும் முடியவில்லை. எதற்கும் பலன் கிடைக்காததால், அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்தது சிஎஸ்கே. இந்த நிலையில் வெற்றி பெற்றேயாக வேண்டிய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை நேற்று துபாயில் சந்தித்தது சூப்பர் கிங்ஸ்.
விராட் கோலி அரை சதம்
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலியின் நிதானமான அரைசதம் உதவியோடு 145 ரன்கள் எடுத்தது. துபாய் மைதானத்தில் இந்த ஸ்கோரே அதிகம்.. அதுவும் சிஎஸ்கே அணிக்கு எதிராக இது ரொம்பவே அதிகம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கலாய் கமெண்ட் அடித்தனர்.
பழைய டீம் ஸ்ப்ரிட்
ஆனால் நடந்தது வேறு. முந்தைய சீசன்களில் எப்படி விளையாடியதோ அப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். துவக்க வீரர் ருதுராஜ் கெக்ய்வாட், ஆரம்பத்தில் அடித்த சிக்ஸர் மட்டும் பவுண்டரி அப்படியே விராட் கோலி ஷாட் எப்படி இருக்குமோ அதுபோன்று இருந்தது. கோலி மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு சிஎஸ்கேவில் ஆடுகிறாரா என்பதைப் போல இருந்தது அவரது ஆட்டத்தின் ஸ்டைல். இதுவரை சோபிக்காமல் இருந்த கெய்க்வாட் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கிளாஸ் எடுத்து விட்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் சூப்பர்
இன்னொரு பக்கம் அம்பத்தி ராயுடு 39 ரன்கள் எடுத்தார். துவக்க வீரர் டு பிளிசிஸ் அருமையான டச்சில் இருந்தார். வெறும் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். இறுதியில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 பந்துகள் மிச்சம் இருக்கும் போது, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட், சிக்சருடன் வெற்றிக்கான ரன்களை எட்டினார். 51 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார் ருதுராஜ் கெய்க்வாட். பந்துவீச்சில் அசத்திய குட்டி பையன் சாம் கரன், 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இனி அடிச்சா என்ன.. அடிக்கலைன்னா என்ன
அப்படியே பழைய சிஎஸ்கேயை பார்ப்பது போல இருக்கிறது என்று சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் என்ன செய்வது. "இனி வயசுக்கு வந்தால் என்ன.. வராட்டா என்ன" என்ற கவுண்டமணியின் டயலாக் போல மாறிவிட்டது சிஎஸ்கே. ஆம் முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பையை, ராஜஸ்தான் வென்றதால் நேற்று இரவே, சிஎஸ்கே பிளேஆப் கனவு தகர்ந்துவிட்டது.
முன்பே செய்திருக்கலாம் சிஎஸ்கே
ஆனால், இந்த நேரம் பார்த்து தான் டீம் செட் ஆகி உள்ளது. ஒருவேளை துவக்க ஆட்டங்களிலேயே ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் போன்ற நேற்றைய போட்டியில் அமைந்த டீமை களமிறக்கியிருந்தால், அவர்களை வளர்த்து எடுத்து இருந்தால் சிஎஸ்கே பழைய சிஎஸ்கேவாக இருந்திருக்குமே என்று கேட்கிறார்கள் ரசிகர்கள். தோனியிடமும், டீம் நிர்வாகத்திடமும் பதில்தான் இல்லை.