கின்னஸ் சாதனை படைத்த 'துபாய் ஃப்ரேம்' கட்டடம்... சிறப்புகள் என்னென்ன?
புகைப்பட சட்டம் வடிவில் துபாயில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலக அளவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் நகரங்களில் ஒன்றாக துபாய் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் காலீபா மற்றும் உலகின் மிக உயரமான ஓட்டல் ஜேடபிள்யூ மேரியாட் என்று பிரம்மாண்ட கட்டடங்கள் மூலமாக உலகின் கவனத்தை துபாய் ஈர்த்து வருகிறது.
அந்த வரிசையில், தற்போது 'புகைப்பட்ட சட்டம்' வடிவிலான உலகின் மிகப்பெரிய கட்டடம் அங்கு திறக்கப்பட்டுள்ளது. துபாய் நகரின் ஜபீல் பூங்கா அருகே இந்த பிரம்மாண்ட கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமான புகைப்பட சட்டம் போன்று உள்ளதால், இதனை 'துபாய் ஃப்ரேம்' என்று அழைக்கின்றனர்.
இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடம் 150.24 மீட்டர் உயரமும், 95.23 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. இரு உயரமான தூண்களில் இடைவெளியுடன் இந்த ஃப்ரேம் வடிவிலான கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.
மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
மேலும், அச்சு அசலாக புகைப்பட சட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், முப்பரிமாண தோற்றத்துடன் இது காணப்படுகிறது. இந்த கட்டடத்தில் 150 மீட்டர் உயரத்தில் துபாய் நகரின் அழகை கண்டு ரசிப்பதற்கான மாடம் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை இந்த மாடத்தில் இருந்து பழைய மற்றும் புதிய துபாய் நகரின் அழகை கண்டு ரசிக்கலாம்.
துபாய் ஃப்ரேம் கட்டடத்தில் செல்வதற்கு பெரியவர்களுக்கு 50 திர்ஹாம்( ரூ.950), சிறியவர்களுக்கு 20 திர்ஹாம் (ரூ.380) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதை தாண்டிய முதியவர்களுக்கு கட்டணம் இல்லை. லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புர்ஜ் காலீபா, ஜேடபிள்யூ மேரியாட்ஸ் ஓட்டல் வரிசையில் இந்த புகைப்பட சட்டம் வடிவிலான கட்டடமும் துபாய் நகரின் புதிய அடையாளச் சின்னமாக மாறி இருக்கிறது. துபாய் செல்பவர்கள் நிச்சயம் பார்வையிட வேண்டிய சுற்றுலாத் தலமாக கூறலாம்.
அடுத்த ஆண்டு துபாயில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பார்வையாளர்களை கவர்வதற்காக பல்வேறு புதுமையான விஷயங்களையும், பிரம்மாண்ட கட்டங்களையும் துபாய் நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.