பொருளாதார சரிவு.. ரிட்டையர் ஆனவர்களுக்கு குறி வைக்கும் துபாய்.. விசா வழங்க பிளான்.. செம திட்டம்!
துபாய்: துபாயில் இருந்து தொடர்ந்து வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் அங்கு புதிய விசா திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வர உள்ளது. முக்கியமாக துபாயில் இருந்து வெளியேறிய முன்னாள் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களை அந்நாட்டு அரசு குறி வைத்துள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுக்க பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் வரை பணக்கார நாடுகள் எல்லாம் மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.
முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு பலர் நாடு திரும்பி உள்ளனர். துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க முழுக்க வெளிநாட்டு பணியாளர்களை நம்பி இருக்கும் நிலையில் இந்த வேலைவாய்ப்பின்மை அந்த நாடுகளை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது.
"ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்".. பரபரப்பை கிளப்பிய யுவன், சாந்தானு டி ஷர்ட்.. கனிமொழி பாராட்டு!
துபாய் நிலை
முக்கியமாக துபாயில் இருந்து இந்திய பணியாளர்கள் பலர் சாரை சாரையாக தாயகம் திரும்பி உள்ளனர். இதனால் துபாயின் அஸ்திவாரமே ஆடிப்போய் உள்ளது. துபாயின் அடிப்படை பணிகள் தொடங்கி அவர்களின் மக்கள் தொகை வரை அனைத்திலும் வெளிநாட்டு பணியாளர்களின் பங்கே அதிகம் உள்ளது. துபாயின் மக்கள் தொகையில் 90% பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிலைமை
ஆனால் தற்போது கொரோனா மூலம் ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக வரிசையாக பலர் துபாயில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அடிப்படை பணிகள் வரை அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டடுள்ளது. மொத்தமாக துபாயின் உள்நாட்டு உற்பத்தி, பணிகள், எண்ணெய் உற்பத்தி எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தடுக்க திட்டம்
இதை தடுக்கும் பொருட்டு அங்கு புதிய விசா திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வர உள்ளது. முக்கியமாக துபாயில் இருந்து வெளியேறிய முன்னாள் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களை அந்நாட்டு அரசு குறி வைத்துள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை தற்போது துபாய் தூசி தட்டியுள்ளது. இதனால் முன்னாள் பணியாளர்களுக்கு விசா வழங்க துபாய் திட்டமிட்டுள்ளது.
விசா
அதன்படி 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு விசா வழங்க துபாய் முடிவு செய்துள்ளது. 5 வருடம் காலாவதி அவகாசத்துடன் இந்த விசா வழங்கப்பட உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஆண்களை குறி வைத்து துபாய் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. குறிப்பிட்ட சில உடல் தகுதி தொடங்கி சில வரையறைகளை இதற்கு துபாய் அரசு விதித்துள்ளது.
தகுதி என்ன
தகுதி உடைய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விசா வழங்கப்படும். இப்படி 55 வயதுக்கு அதிகமான நபர்கள் விசா பெறுவதற்கு இன்னொரு பக்கம் கடுமையான கட்டுப்பாடுகளையும் துபாய் அரசு அறிவித்துள்ளது. அதன்படி இவர்கள் சேரும் வேலைக்கு குறைந்த பட்சம் மாத சம்பளம் 20 திர்ஹாம்ஸ் இருக்க வேண்டும் அல்லது சேமிப்பு தொகையாக 1 மில்லியன் திர்ஹாம்ஸ் இருக்க வேண்டும், அல்லது துபாயில் 2 மில்லியன் மதிப்புள்ள சொத்து இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிகவும் தகுதியான நபர்களை மட்டுமே துபாய் தேர்வு செய்ய உள்ளது. இதனால் துபாய்க்கு உண்மையில் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் செல்ல ஆர்வம் தெரிவிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. ரிட்டையர் ஆன பணக்காரர்களை குறி வைத்து இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.