சபாஷ்.. பெரிய மனதுடன்.. தாராள உதவிகளில் குதித்த.. துபாய் மகளிர் சங்கம்!
துபாய்: வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் - பாரதி
நம் முன்னோர்கள் பொன் தரும் பூமியென மண்ணையும், நீராதாரத்தைப் பெருக்க ஏரி குளங்களையும், தங்களைச் சுற்றி செடி கொடிகளை வளர்த்துத் தூய காற்றினையும், பயன்பாட்டின் அளவோடு நெருப்பையும், தெளிந்த நிர்மலமான ஆகாயத்தையும் காத்து போற்றி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். இன்றோ நாம் என்ன செய்து வைத்திருக்கின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.
மனிதன் எல்லை மீறும் போது பஞ்ச பூதங்களும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று வந்திருப்பது கொரோனா வைரஸ்.
பாட்டி அன்று சொன்னது, "இருக்கின்றவன் வாயிலும் மண்ணு இல்லாதவன் வாயிலும் மண்ணு" ஆனால் இன்றோ "இருக்கின்றவன் உடலிலும் கொரோனா இல்லாதவன் உடலிலும் கொரோனா".
பாரபட்சமின்றி கொரோனா தனது கிடுக்கிப் பிடிக்குள் உள்ளவனையும், இல்லாதவனையும் கொண்டு வரத் தவறவில்லை. ஆனாலும் இதன் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தட்ட, கீழ்த்தட்ட மக்கள் தான்.
சொந்த நாட்டிலேயே சொல்லொன்னாத் துயரம் எனில் வெளிநாட்டில் வேலை தேடி கிடைக்காமல் திண்டாடுபவர்களும், இருந்த வேலையையும் இழந்து பரிதபவிப்பவர்களும், சுற்றுலா வந்த இடத்தில் வெற்றாலாக நிற்கும் வேதனையும், குடும்பங்கள் ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வாடும் அவலமும், அடுத்து என்ன நிகழப் போகின்றதோ என்ற கவலை நிறைந்த முகத்தோடு நிற்பவர்களைப் பார்க்கின்ற நமது நெஞ்சம் துடித்துப் போகின்றது.
துபாயில், இந்தச் சூழ்நிலையில் மனித நேயமிக்க மக்கள் களத்தில் இறங்கித் தங்களால் முடிந்த உதவிகளைத் தேவைப்படுவோர்க்குச் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்களும், நண்பர்களும் இணைந்து செய்த உதவியின் மூலம் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் அடங்கிய பெட்டி (251) தயார் செய்து தொடர்ந்து நான்கு நாட்கள் அதை உதவி தேவைப்படும் மக்களைக் கண்டு நேராக அவர்களிடம் சேர்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
இது தவிர "மலபார் கோல்ட்" கொடுத்த ஒரு மாதத்திற்கான மளிகைப் பெட்டி (30) குடும்பத்திற்கு ஒன்றாகக் கொடுத்தோம். எங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி. துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களுக்கும் கொடுக்க எங்களுக்கு அனுமதி வழங்கிய Community Development Authority க்கு மனம் நிறைந்த நன்றி.
தேவையான நேரத்தில் தேவையான மக்களுக்குத் தேவையான உதவி கிடைக்கக் காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும், இந்த சந்தர்பத்தில் உறுதுணையாக இருந்த என் அத்தான் பத்மநாதன், நண்பர் ஜாபர் அலி, சந்தோஷ் மைக்கேல், களத்தில் தன்னார்வத்துடன் கலந்து கொண்ட உறுப்பினர்கள், தமிழ் பெண்கள் சங்கம் சான்றிதழ் பெறக் காரணமாக இருந்த டாக்டர் சோனா ராம், மளிகைப் பொருட்கள் வைக்கச் சரியான அளவில் பெட்டிகள் செய்து தந்த கிருஷ்ணன் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
மீனாகுமாரி பத்மநாதன் - தலைவி
தமிழ் பெண்கள் சங்கம்
துபாய்.