மொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு!
துபாய்: மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் புகழஞ்சலி மற்றும் கண்ணன் ரவி வணிக குழுமங்களின் இருபத்தைந்தாவது வெள்ளி விழா என்ற முப்பெரும் விழா துபாய் மில்லினியம் ஹோட்டலில் வெள்ளிகிழமை அன்று நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக திமுக பொருளாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவரும், திமுக பொருளாருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.
அமீரக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தொழிலதிபர் காயிதே மில்லத் பேரவை தலைவர் லியாகத் அலி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்எஸ் மீரான் பேசினார். அவர் பேசும்போது "மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் , மன்னாவாம் மன்னர்க் கொளி" எனும் குறளுக்கு ஏற்ப தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டுகளாக தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார் எனவும், மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை , என்நோற்றான் கொல்எனும் சொல். எனும் குறளுக்கு ஏற்ப தலைவர் தளபதி அவர்கள் வாழ்ந்து காட்டி வருகிறார் .
"அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும், திறனறிந்தான் தேர்ச்சித் துணை என்ற வள்ளுவனின் வாக்கிற்குகேற்ப பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உற்ற துணையாக 60 ஆண்டுகளாக விளங்கினார் எனவும் குறிப்பிட்டார். மேலும் ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நாளை நினைவு கூர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திமுக பொருளாளர் துரைமுருகன், பல மொழி, பல கலாச்சாரம், பல பண்பாடு கொண்ட மக்களை அரவணைத்து அவர்களுக்கான நல்ல வாழ்வியல், தொழில் சூழலை உருவாக்கிய அமீரக ஆட்சியாளர்களை பெரிதும் பாரட்டுவதாக தன் உரையை ஆரம்பித்தார்.
தன் உரையில் தமிழக மொழிப்போர் போராட்டங்கள், கலைஞர் நினைவு குறித்து, அவரின் பல்துறை ஆளுமை குறித்தும் பல அரிய தகவல்களை நெகிழ்ச்சியுடனும், சுவராஸ்யத்துடனும் பகிர்ந்து கொண்டார். இன்று சென்னை பூந்தமல்லியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் தான் கலந்து கொள்ள வேண்டிய சூழலில், திமுக தலைவரின் அனுமதியுடன் துபாயில் இருக்க வேண்டிய நிலையை விவரித்து, தன் கல்லூரி கால மொழிப்போர் போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
சென்னை பச்சையப்பா கல்லூரியில் ஒரத்தநாடு எல். கணேசன் தலைமையில் போராடும் போது தான் கைது செய்யப்பட்டதும், அதன் பின்பு போராட்டம் தீவிரமடைந்து பலர் தங்களின் உயிர், செங்குருதி சிந்தி செம்மொழியான தமிழ் மொழியை அழித்து விடாமல் காப்பாற்றியதை குறிப்பிட்டார். தற்போது உயிருடன் இருக்கும் மொழிப்போர் தியாகிகளில் தானும் ஒருவர் என்பதை பெருமையுடன் கூறினார்.
பரிதிமாற் கலைஞர் என்று கலைஞரால் பெயர் சூட்டப்பட்ட சூர்ய நாராயண சாஸ்திரிகளின் நூற்றாண்டுக்கு முந்தைய கோரிக்கையான தமிழை செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்பதை, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சோனியா காந்தியின் உதவியுடன் நிறைவேற்றி காட்டினார். இன்று செம்மொழி அந்தஸ்தை எட்டிய பல மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாத்தும், தமிழ் உயிர்ப்புடன் விளக்குவதற்கும் திராவிட இயக்க உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமே காரணம் என்பதை பெருமையுடன் எடுத்து வைத்தார்.
கலைஞர் குறித்து பேசும் போதெல்லாம் தான் உணர்ச்சிவசப்படுவதும், ஐம்பதாண்டுகளாக கலைஞருடனான தன் அரசியல், சட்டமன்ற, பொது வாழ்வு குறித்தும், கலைஞரின் சினிமா வசன ஆளுமை, நேரத்திற்கேற்றவாறு சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக பேசும் சிலேடை குறித்த பல வரலாற்று நினைவுகளை சொல்லிய போது கூட்டத்தினர் பரவசமடைந்தனர்.
கலைஞர் அவர்கள் திமுகவின் தொண்டர்களை அரவணைத்ததும், தன் மந்திரிகளை சுயமரியாதையைடன் நடத்தியது குறித்தும் பேசி, எளிய மக்களுக்கான, ஒடுக்கப்பட்டவர்களுக்கான தலைவராகவே செயல்பட்டு, கடைசி வரை சமத்துவ நாயகனாகவும் வாழ்ந்தவர் என்றும், சென்னை ஐகோர்ட்டில் முதல் ஒடுக்கப்பட்ட சமுதாய நீதிபதியை கலைஞர் தான் நியமித்தார் என்றும், அதன் வரலாறு குறித்தும் விரிவாக பேசினார்.
தமிழகத்தின் பல சமூக நலத் திட்டங்களும், வரலாற்று திட்டங்களும், தமிழ் செம்மொழியாக உயர்த்தப்பட்ட நிகழ்வுகளும் கலைஞரை காலம் கடந்தும் நினைவு கூறும் என்றும் பேசினார். தாங்கள் அமைச்சராக இருந்த காலங்களல் ஐந்து மணிக்கு தொலைபேசி ஒலித்தால் மறுமுனையில் அது கலைஞராக மட்டுமே இருக்க முடியும், ஊடகங்களில் வெளிவந்த மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர் அதிக அக்கறையுடன் இருந்ததை குறிப்பிட்டு மெய்சிலிர்க்க வைத்தார்.
மூன்றாம் பாலினத்தவரை திருநங்கைகள் என அழைத்து அவர்களுக்கான சமூக நல
திட்டங்களை வகுத்ததும், மாற்று திறனாளிகளுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியது, திராவிட கொள்கைகளை அரசின் சட்டமாக்கியதில் பெண்களுக்கான சொத்துரிமை, ஆகம விதிகள் படித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டங்கள் சமூக புரட்சியை வித்திட்டது என்று கலைஞர் புகழ் பாடினார்.
தன் வாழ்நாளின் பாதி காலத்திற்கு மேல் 59 ஆண்டுகளாக தோல்வியே அடையாத சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும், 19 வருடங்கள் தமிழக முதல்வராகவும் சோர்வின்றி தமிழக உரிமைகளுக்குகாவும், நலன்களுக்காகவும் சமரசமில்லாமல் பணியாற்றியவர் கலைஞர் என்றும், சட்டமன்றத்தில் பிரச்சினைகளின் போது கலைஞர் சமயோசிதமாக உபயோகித்த நகைச்சுவை சம்பவங்களை எடுத்து வைத்தது கூட்டத்தை கலகலப்பாக்கினார்.
தன்னையும், தன் அரசையும், மூன்றாம் தர அரசு என்று எதிர்கட்சி உறுப்பினர் ஹண்டே சட்டமன்றத்தில் சொன்ன போது, நான் உள்பட வீறுகொண்டு எழுந்த திமுக உறுப்பினர்களை அமைதிப்படுத்திய கலைஞர், நண்பர் ஹண்டே சொல்வது போல இது மூன்றாம் தர அரசு அல்ல, மனு தர்மத்தின் வரிசை படி கடைசி படி நிலையில் இருக்கும் சூத்திரனின் நான்காம் நிலை அரசு இது என்று தன் அறிவாற்றலால் மனுதர்மந்தை விமர்சித்தும் பேசியதை குறிப்பிட்டார் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள்.
ஒருமுறை உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர், தண்ணீருக்காக செவிலியரை அழைத்த போது அவர் வேறொரு பணியில் மும்முரமாக இருந்ததால் கலைஞர் அழைத்ததை தவறவிட்டார். சிறிது நேரம் கழித்து செவிலியர் கலைஞரிடம் வந்த போது, உன் பெயர் என்ன காவிரியா? தண்ணீர் கேட்டால் தரமாட்டேன் என்கிறாய் என்று செவிலியரை சிலேடையாக குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்தார்.
கலைஞரின் மருத்துவ சிகிச்சையின் போது தொண்டை குழியில் இருந்த குழாயை அகற்றி விட்டு மருத்துவர்கள் அவருடைய பேச்சு, குரல் குறித்து சோதனை செய்ய சில கேள்விகளை கேட்ட போது, தனக்கு பிடித்தமானவர் அண்ணா என்று அந்த சூழலிலும் பேரறிஞரை நினைவு கூர்ந்தார் தலைவர் கரைஞர். அண்ணாவின் மீதான கலைஞரின் பாசத்தை அளவிடமுடியாது என்றார் துரைமுருகன்.
தன் மீதி தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்திய கலைஞரின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்ததையும், கலைஞருக்கு தொண்டனாக ஆரம்பித்த தன் அரசியல் வாழ்வு தளபதியை முதல்வராக்குவதன் மூலமே நிறைவு பெறும் என்றும் அதற்குரிய சூழல்கள் பிரகாசமாக இருப்பதாகவும் சூளுரைத்தார், திருமுருகன். மேலும் கண்ணன் ரவி குழும நிறுவனங்களின் தலைவர் கண்ணன் ரவியுடனான தன் நட்பு குறித்தும் விளக்கி, குழுமத்தின் வளர்ச்சிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் அமீரக திமுக துணைத்தலைவர்கள் சிம்ம பாராதி செந்தில், முஸ்தாக், செயலாளர் முஸ்த்தபா, பிலால், புரோஸ்கான், உதயநிதி ரசிகர்மன்ற தலைவர பாலா, ஜெசிவிச்டோர், மற்றும் மதிமுக பாலா, , விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், இலக்கிய ஆர்வலர்களும் ஆசிப் மீரான் , ஜெஸிலா பானு, ரியாஸ், நஜ்முத்தின், வஹீத , சமூக ஆர்வலர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். விழாவை காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் தாஹா அவர்கள் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை தாஹா அவர்களுடன் இணைந்து டிடிஎஸ் பிரசன்னா, விஜயராகவன், பாலா சாதிக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.