அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா
துபாய் : துபாய் அல் தவார் பூங்காவில் தேவிபட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணியாற்றிய ஆர்.கே. இந்திரா ஆசிரியைக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் தேவிபட்டிணம் நிஜாம் அக்பர் தலைமை வகித்தார். பலீல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமிது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பிரபாகர், மணிகண்டன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
அப்துல் ரஹ்மான், சபீக் அலி, முஹம்மது அஸ்லம், தாவூத் அலி, சீனி முஹம்மது உள்ளிட்ட பலர் பள்ளிக்கூட நாட்களில் இந்திரா ஆசிரியையிடம் தாங்கள் படித்த நாட்களை நினைவு கூர்ந்தனர். அப்போது ஆசிரியை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தாங்கள் இன்றைக்கு உயர் நிலைக்கு வந்துள்ள நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு சில நேரங்களில் தாங்கள் அடி வாங்கியதையும் கூறினர். மேலும் சிலர் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன் கண்ணீரை வரவழைக்கும் விதத்திலும் அமைந்திருந்தது. அதன் பின்னர் ஆசிரியை ஆர்.கே. இந்திரா ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியையிடம் படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். சுவையான மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.