கொரோனாவில் இருந்து தப்பிய துபாய்... உலகெங்கும் இருந்து விசிட் அடிக்கும் சுற்றுலா பயணிகள்
அபுதாபி: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிய துபாய், தற்போது உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசிட் அடிக்கும் முக்கிய இடமாக மாறியுள்ளது.
கொரோனா பரவல் மொத்த உலகத்தையே புரட்டிப்போட்டுள்ளது. பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் காரணமாகப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய் நாட்டை நோக்கி தற்போது உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். மற்ற நாடுகளைப் போல இல்லாமல் கொரோனாவில் இருந்து துபாய் தப்பிவிட்டதைப் போலவே தெரிகிறது.
அதிகரித்த கொரோனா பாதிப்பு
ஆனாலும் கூட எவ்வளவுதான் முன்னச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதிகளவில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் எளிதில் கொரோனா பரவல் ஏற்படுகிறது. கடந்த மாதம் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்திலிருந்து 2.90 லட்சமாக அதிகரித்தது. தினசரி 4000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நிலைமை இப்படியிருக்கும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டியது ஏன் என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுற்றுலாத் துறை
இருப்பினும், துபாய் நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளையே நம்பியுள்ளது. இதன் காரணமாகச் சுற்றுலாத் துறைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டு வருகிறது. ஹோட்டல்கள் மற்றும் மால்கள் 70% இருக்கைகளுடனும் சினிமா தியேட்டர்கள் 50% இருக்கைகளுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயனிகள் வரவேற்பு
துபாய் நாட்டில் சுற்றுலாத் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்குப் பல சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் வரும் மக்கள் சற்று ரிலாக்ஸ் செய்ய முடிகிறது என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுற்றுலாப் பயணிகளை அரசு சிறப்பாகவே நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. ஒரு கோடி பேரைக் கொண்டுள்ள துபாயில் தற்போது வரை 40 லட்சம் பேருக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒருபுறம் விரைவடுத்தப்படுத்தி விட்டு, மறுபுறம் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தவும் துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.