நடுக் கடலில் மயக்க ஊசி போட்டு.. 'கடத்தி' சென்றனர்.. இந்திய கடற்படையினரை கை காட்டும் துபாய் இளவரசி!
துபாய்: துபாய் இளவரசி லதிஃபா அல் மக்தூம் மயக்க ஊசி போட்டு பிடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமிற்கு மொத்தம் ஆறு மனைவிகள். மன்னரின் 25 பிள்ளைகளில் ஒருவர்தான் இளவரசி லதிஃபா அல்-மக்தூம். 35 வயதாகிறது.
தனது தந்தையின் கெடுபிடிகளால் வெறுத்துப்போயிருந்த லதிஃபா, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தனது உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென் என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்பியோடினார்.
படகில் பயணம்
தப்பிய லதிஃபா படகு ஒன்றில் ஏறி, பயணப்பட்டார். கோவா கடல் பகுதிக்கு அவர் படகு 8 நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது. இந்தியாவிடம் அடைக்கலம் பெற்று தப்பலாம் என்று மகிழ்ச்சியாக இருந்தார், லதிஃபா. ஆனால், வேறு அதிவிரைவு படகுகளில் அங்கு வந்த அமீரக பாதுகாப்பு படையினர், லதிஃபா படகை சூழ்ந்துள்ளனர். 12 முதல் 15 இந்திய கமாண்டோக்களும், 2 அமீரக வீரர்களும், லதிஃபா பயணித்த படகிற்குள் நுழைந்துள்ளனர். இதன்பிறகு லதிஃபா துபாய்க்கே கொண்டு செல்லப்பட்டார்.
இந்திய கமாண்டோக்கள்
இப்போது லதிஃபா நிலைமை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் லதிஃபாவுடன் படகில் இருந்த, டினா ஜவுஹைனென், ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், லதிஃபா கைகள் பின்னால் கட்டப்பட்டு படகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். நான் அரசியல் அடைக்கலம் கோரி வந்துள்ளேன் என்று திரும்ப திரும்ப அவர் சத்தம் போட்டு சொன்னார். ஆனால் இந்திய வீரர்கள் அதை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
கழிவறைக்குள் இருந்தபடி வீடியோ
இதனிடையே, லதிஃபா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கழிவறைக்குள் ஒழிந்து இருந்தபடி அவர் வெளியிட்ட வீடியோவிலும், இந்திய படை வீரர்கள் தன்னை பிடித்துச் சென்றதை விவரித்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்: இந்திய கமாண்டோக்கள் அவர்கள் கப்பலுக்கு கொண்டு சென்றனர். நான் துபாய் செல்ல விரும்பவில்லை. இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கொடுங்கள் என்று கதறினேன். ஆனால் எனக்கு மயக்க ஊசி போடப்பட்டது. பிறகு ஒரு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். துபாயில், சென்று இறக்கிவிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டேன்.
ஐ.நா. தூதர்
நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்று காவலர்கள் என்னை மிரட்டுகிறார்கள். நான் கைது செய்யப்பட்ட டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார். அவர் விடுவிக்கப்பட்டதும், எனது நிலைமையை பற்றி, வெளி உலகுக்கு சொன்னார். எனவே ஐக்கிய நாடுகள் முன்னாள் தூதர் மேரி ராபின்சன் என்னை சந்திக்க வந்தார்.
நடிப்பு
ஆனால், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்று எனது சிற்றன்னை ஹயா தெரிவித்தார். அதை நம்பி நானும் பேசினேன். ஆனால் தொடர்ந்து நான் அடைக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு லதிஃபா வீடியோவில் கூறியுள்ளார். தற்போது, அந்த வீடியோ உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவுக்கு சிக்கல்
துபாய் இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரான டொமினிக் ராப், இந்த விவகாரத்தை அமீரகத்துடன் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக லதிஃபா கூறியுள்ளதால் ஐ.நா.சபையில் இந்தியா பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.