அரசியல் காரணங்களால் துண்டாடப்பட்ட இந்தியா.. துபாயில் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல்
Recommended Video
துபாய்: அரசியல் காரணங்களால் இந்தியா துண்டாடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.
இந்தியர்களை பார்த்ததும் சிரித்தபடியே கையசைக்க, அவரை பார்த்த உற்சாகத்தில் கூடியிருந்தவர்கள் 'ராகுல், ராகுல் என மகிழ்ச்சியாக குரல் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் துபாய் அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். ராகுல் காந்தியை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வரவேற்று உரையாடினார்.
ராகுல் காந்தி சந்திப்பு
அதன்பின்னர், துபாயில் ஒரு ஓட்டலில் இந்திய தொழில் அதிபர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் கலந்துகொண்டனர். சந்திப்பு கூட்டம் முடிந்ததும் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராகுலை காண ஆர்வமுடன் காத்திருந்தனர்.
சகித்துக் கொள்ளும் மக்கள்
அந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தபடி ராகுல்காந்தி பேசியதாவது:இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சியை மக்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் காங்கிரஸ் அரசு அமையும். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இன்று துபாயை உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் முயற்சிகளில் பங்கெடுத்துள்ளீர்கள்.
கடின உழைப்பை அறிவேன்
உங்களின் கடின உழைப்பை நான் நன்கு அறிவேன். நாள் முழுவதும் உழைத்து, ஈட்டிய பணத்தை உங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறீர்கள். உங்களுக்கு வேண்டியவற்றை... தேவையானவற்றை செய்வதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
மன் கீ பாத் போல அல்ல
நான் உங்களுடன் பேச, உங்கள் குறைகளை கேட்கத்தான் வந்திருக்கிறேன். மன் கீ பாத் போல தனிநபர் போல, நான் மட்டும் பேச நீங்கள் அதை கேட்க வேண்டியது இல்லை. அப்போது தொழிலாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
நலம் விசாரிப்பு
பிறகு தொழிலாளர்கள் வசிக்கும் அறைகளுக்கு சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.
பொதுக்கூட்டத்தில் ராகுல்
பின்னர் பஞ்சாப் சமூக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு சென்று, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து, துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சரியான சிந்தனை
இந்தியா போன்ற ஒரு நாட்டை நீங்கள் உலகில் வேறு எங்கும் காணமுடியாது. ஒரயொரு ஒரு சிந்தனையை தவிர... மற்ற அனைத்து செயல்பாடுகளும் தவறாகவே இருக்கும். இன்று.. நான் நேசிக்கும் நாடு அரசியல் காரணங்களுக்காக பிளவுப்பட்டு உள்ளது என்று பேசினார்.
சந்தித்து ஆலோசனை
அதன் பின்னர், துபாய் ஜபீல் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள்.