தலைக்கு மேல் குவிந்த கடன்.. மன வேதனையில் இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை
துபாய்: சமுதாய சேவையில் அதிக நாட்டம் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் பாராட்டப்பட்ட இந்தியத் தொழிலாளர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் வெள்ளலூர் என்ற 35 வயது கொண்ட அந்த இந்தியர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குட்பட்ட ராஸ் அல் காய்மா பகுதியில் பணிபுரிந்து வந்தார். பல்வேறு தன்னார்வ பணிகளில் தம்மை அவர் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
தாம் குடியிருந்த ராஸ் அல் காய்மா பகுதியில், சந்தீப் பல்வேறு பொதுச்சேவைகளில் இறங்கி பல நல்ல காரியங்களை செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து ரத்ததான முகாம்களை நடத்தி வந்த அவரின் சேவையை பாராட்டி, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ம் ஆண்டு கவுரவித்து சான்றிதழ் ஒன்றையும் வழங்கியுள்ளது.
அதுதவிர, 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஊனமுற்று பின்னாளில் உயிரிழந்த இந்திய தொழிலாளி ஒருவரின் குடும்பத்துக்கு 4 லட்சம் நிவாரண தொகையை சந்தீப் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், தங்கியிருந்த தமது இல்லத்திலேயே அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்து கொள்ளும் போது, உடன் தங்கியிருந்த மற்ற இருவரும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சந்தீப், டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வந்ததாகவும், அதில் போதிய வருவாய் இல்லாமல் அவர் சிக்கலில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும்,சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான அரசு நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.