வயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது
துபாயில் தாயை சித்ரவதை செய்து கொன்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய்: துபாயில் தாயை எண்ணற்ற சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்றதாக இந்தியர் ஒருவர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்தாண்டு இவரது தாய் இந்தியாவில் இருந்து இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால், அத்தாயின் வருகை அவரது மகனுக்கும், மருமகளுக்கும் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. தங்களது குழந்தையை அவர் சரிவரக் கவனித்துக் கொள்வதில்லை என அக்கம்பக்கத்தாரிடம் அப்பெண் புகார் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த வயதான பெண்மணி அவரது வீட்டின் பால்கனியில் அரைகுறை ஆடையுடன், உடலில் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அக்கம்பக்கத்தார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் உடலின் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்கள் பெரிதாக இருந்தன.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தார் அந்த இந்திய தம்பதி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணையை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு துபாய் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதுவரை தம்பதியை காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "அவரது மனைவி தன் குழந்தையை மாமியார் வந்ததில் இருந்து சரியாக பார்த்துக் கொள்வதில்லை. நான் வேலை விட்டு வரும் வரை உங்களிடம் இருக்கட்டும் என கூறி என்னிடம் குழந்தையை விட்டுச் சென்றார்.
மூன்று நாட்கள் கழித்து அவரது வீட்டின் பால்கனியில் வயதான அவரின் மாமியார் அரைகுறை ஆடையுடன் மோசமான நிலையில் விழுந்துக் கிடந்தார். உடனடியாக செக்யூரிட்டிக்கு தகவல் கொடுத்தேன். உடனே அவரது வீட்டு கதவை தட்டினேன். ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டேன். அவர் அழுததையும், பட்ட வேதனையையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.