கடைசி ஓவரில் தேவை 4 ரன்.. கொடுத்தது 1 ரன், எடுத்தது 2 விக்கெட்! ஹீரோ கார்த்திக் தியாகி- வாழ்த்து மழை
துபாய்: "கார்த்திக் தியாகி.." நேற்று இரவு முதல், கிரிக்கெட் உலகமெங்கும் எதிரொலிக்கும் ஒற்றைப் பெயர் இதுதான்.
அக்தரை போல அச்சுறுத்தக்கூடிய எக்ஸ்பிரஸ் வேகம் கிடையாது. மணிக்கு 140 கி.மீ அல்லது அதற்கும் குறைவான அளவுக்கு வேகத்தில், பந்தை ஸ்விங் செய்வதுதான் ஒரே ஆயுதம். இதைக் கொண்டுதான் பஞ்சாப் கிங்ஸ் அணியை சுருட்டி ஓடவிட்டு அடித்துள்ளார் இந்த இளம் புயல்.
கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு தேவை வெறும் 4 ரன்கள். கை வசம் இருப்பதோ 8 விக்கெட்டுகள். கிரிக்கெட்.. அதிலும் குறிப்பாக மார்டன் டே கிரிக்கெட் பற்றி ஓரளவு தெரிந்த சிறுபிள்ளையிடம் கேட்டால் கூட, பேட்டிங் செய்யும் அணிதான் வெற்றிபெறும் என்று சொல்லியிருப்பார்கள்.
எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்?
ஒரு ரன்தான் கொடுத்தார்
கூகுளில் வெற்றி கணிப்பு கூட பஞ்சாப் அணிக்கு தான் ஏறத்தாழ 100% என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் ஒரு ரன்.. ஆம், ஜஸ்ட் ஒரு ரன் மட்டுமே அந்த ஓவரில் கொடுத்தார் இந்த இளம் மீடியம் வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி. ஆனால் வெற்றி இலக்கைத் துரத்தும் வேகத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் அணிக்கு மிச்சமாக இருந்தது. ஆக மொத்தம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானுக்கு வெற்றியை பரிசளித்தார் கார்த்திக் தியாகி.
கார்த்திக் தியாகி ஆயுதம்
இத்தனைக்கும் 20வது ஓவரை இவர் வீச வந்தபோது ஏதன் மர்க்ரம் 25 ரன்களுடனும் , நிகோலஸ் பூரன் 32 ரன்களுடனும் நன்கு 'செட்டாகி' களத்தில் இருந்தனர். அப்படியும், இவரது துல்லியமான ஃபுல் டாஸ், அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் யார்க்கர் லென்த் பந்துகளை சமாளிக்க முடியாமல் தோற்றுப் போனது பஞ்சாப் அணி.
மனதார பாராட்டு
இப்போதைய மார்டன் டே கிரிக்கெட் உலகத்தில், அதுவும், 20 ஓவர் கிரிக்கெட் உலகத்தில், எப்போதாவது நடக்கக்கூடிய அதிசயம்தான் பந்துவீச்சாளரின் கை ஓங்குவது. அந்த அற்புத தருணம் நேற்று நிகழ்ந்ததால் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள். ஃபேன்ஸ், பாராட்டு ஒரு பக்கம் என்றால், இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் மனதார, கார்த்திக் தியாகிக்கு பாராட்டு மழை பொழிந்து உள்ளனர். இதோ ஜாம்பவான்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்..
பூம் பூம் பும்ரா
ஜஸ்ப்ரிட் பும்ரா: என்னா மாதிரி ஓவர் கார்த்திக் தியாகி. அப்படி ஒரு நெருக்கடியான நிலையில், மனசை கூலாக வைத்துக் கொண்டு, உங்கள் வேலையை முடித்துள்ளீர்கள். கிரேட் ஸ்டஃப். கவரத்தக்க பவுலிங் என்று தெரிவித்துள்ளார்.
வெங்கடேச பிரசாத்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் வெங்கடேச பிரசாத் கூறுகையில், கார்த்திக் தியாகியிடமிருந்து உலக லெவல் பந்து வீச்சு வந்துள்ளது. அருமையான பவுலிங் என்று மனதார பாராட்டியுள்ளார்.
வீரேந்திர சேவாக்
அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் கூறுகையில், வாவ்! 4 ரன்களுக்குள் எதிரணியை கடைசி ஓவரில் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், 1 ரன் மட்டுமே கொடுத்துள்ளார். கார்த்திக் தியாகியிடமிருந்து அருமையான ஓவர். பஞ்சாப் அணி தங்களைத் தாங்களேதான் குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் தியாகி சம்பளம்
கார்த்திக் தியாகியை 1.30 கோடி சம்பளத்தில் வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். மணிக்கு 140 கி.மீ என்பது இவரது சராசரி வேகம். 20 வயதாகும் இந்த இளம் வீரர் இந்திய அணியின் வருங்கால சொத்து என்பது மட்டும் உண்மை.