அந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்?!
துபாய்: பெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் ரவி பிஷ்னோய் போட்ட ஒரு ஓவர் மொத்தமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
எல்லா ஐபிஎல் தொடரையும் போல இந்த ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணி சொதப்ப தொடங்கி உள்ளது. முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூர் வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
ஆனால் அடுத்த போட்டியிலேயே இன்று ''திரும்பி வந்துவிட்டேன்'' என்று கூறி பெங்களூர் மீண்டும் சொதப்ப தொடங்கி உள்ளது. பெங்களூரின் பேட்டிங், பவுலிங் இரண்டும் இன்று மிக மோசமாக சொதப்பியது.
ஆர்சிபி சொதப்புவதை கூட ஏற்கலாம்.. ஆனால் இதுதான் அதிர்ச்சி தருகிறது.. கோலியால் கலக்கத்தில் ரசிகர்கள்!
இலக்கு என்ன
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் மட்டும் 132 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 17 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூர் தோல்வி அடைந்தது.
வரிசையாக விக்கெட்
அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. தேவ்தத் வெறும் 1 ரன்னிற்கு அவுட்டானார். அதேபோல் ஜோஷ் ப்ளிப் டக் அவுட்டானார். கோலி வெறும் 1 ரன் எடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் ஆரோன் பின்ச், ஏ பி டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக அடித்து ஆட தொடங்கினார்கள்.
ஆனால் என்ன
இவர்கள் இருவரும் பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி வழி நடத்தி செல்வார்கள் என்று கருதப்பட்டது. அதிலும் ஆரோன் பின்ச் 3 பவுண்டரி அடித்து அதிரடிக்கு தயார் ஆனார். 21 பந்தில் ஆரோன் 20 ரன்கள் எடுத்து இருந்தார். இவரின் விக்கெட்டை எடுக்க பஞ்சாப் அணி திணறிய போதுதான் 8வது ஓவர் வீசிய ரவி பிஷ்னோய் ஆட்டத்தை பெங்களூரிடம் இருந்து பறித்தார்.
விக்கெட் எடுத்தார்
ரவி பிஷ்னோய் வீசிய அந்த ஓவரில் ஆரோன் பின்ச் போல்டானார். அப்போதுதான் மொத்தமாக பெங்களூரிடம் இருந்து போட்டி கைவிட்டு போனது. அதன்பின் வரிசையாக பெங்களூர் அணி சீட்டு கட்டு போல சரிந்தது. அதன்பின் ரவி பிஷ்னோய் தொடர்ந்து நன்றாக ஆடிய வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் விக்கெட்டையும் எடுத்தார். அதோடு நிறைய கேட்ச்களை இவர் பிடித்தார்.
கேட்ச் பிடித்தார்
தேவ்துத், கோலி ஆகியோரின் கேட்சையும் இவர்தான் பிடித்தார். இதனால் 98 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் தோல்வி அடைந்தது. போட்டியை மொத்தமாக மாற்றியதில் ரவி பிஷ்னோய் முக்கிய பங்கு வகித்தார். அஸ்வின் இடத்தை பஞ்சாப் அணியில் இவர்தான் நிரப்ப போகிறார். இந்திய அணியில் இவர் விரைவில் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடி உள்ளார்.
பின்னணி என்ன
கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இவர் 17 விக்கெட்டுகளை வெறும் 6 போட்டியில் எடுத்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். அப்போதே இவர் பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார். அதன்பின் பஞ்சாப் அணி இவரை 2 கோடிக்கு எடுத்தது. கடந்த வருடம் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. .