ரமலான் மாதம் பிறந்தது... லாக்டவுனை தளர்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
துபாய்: ரமலான் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து 24 மணி நேர லாக்டவுனை 8 மணி நேரமாக குறைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
Recommended Video
புதிய அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் லாக்டவுன் அமலில் இருக்கும். பகல் நேரத்தில் லாக்டவுன் தளர்த்தப்படும். சில முக்கிய கடைகள் மட்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக எமிரேட்ஸில் லாக்டவுன் அமலில் உள்ளது. 24 மணி நேர லாக்டவுன் அங்கு அமலில உள்ளது. மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ரமலான் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது.
பல நாடுகளிலும் ரமலான் மாதம் தொடங்கியது... வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
துபாய் மற்றும் அபுதாபியில் ஷாப்பிங் மால்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், போதிய சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைகளுக்கு வருவோர் அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
ரெஸ்டாரெண்டுகளில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவான இருக்கைகள்தான் இருக்க வேண்டும். டேபிள்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். வீடுகளில் இப்தார் போன்றவற்றை நடத்துவோர் அதிகபட்சம் 10 பேர் வரை மட்டுமே கூட அனுமதிக்கப்படுகிறது.
கை குலுக்குவது, கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிப்பது போன்றவை முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் துபாயில் மெட்ரோ சேவை தொடங்கப்படவுள்ளது. லாக்டவுன் தளர்வானது ரமலான் மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனாவைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 8756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் புனித ரமலான் மாதம் அமைதியாக பிறந்துள்ளது.