கைகுலுக்கல், செல்பி என துபாயை கலக்கிய ராகுல்... லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்
Recommended Video
துபாய்:முதல்முறையாக துபாய் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தது, உலகளவில் மற்ற நாட்டினரை உற்று பார்க்க வைத்துள்ளது.
பொதுவாக.. அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது.. அவர்களின் பயணம் என்பது அரசியல் ரீதியாக இருப்பதோடு, நாட்டு நலன் சார்ந்ததாகவும் இருக்கும். கடந்த 50 ஆண்டுகளை கடந்தும் வெளிநாடு செல்லும் இந்திய தலைவர்களின் பயணங்கள் என்பது அப்படித்தான் இருந்து வந்தது.
ஆனால் முதன்முறையாக.. கார்ப்பரேட் வடிவிலான அரசியல் தன்மையுடன், கவர்ந்திழுக்கும் வகையிலான வெளிநாட்டு பயணம், உள்நாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்ற புதிய கோணத்தை அறிமுகப்படுத்தியது பாஜக. அதிலும் 2014ம் ஆண்டு லோக் சபா தேர்தல் பிரச்சாரத்தை நமது தேசம் மறக்காது. (அமெரிக்க தேர்தல் பிரச்சார ஸ்டைல் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்தது தனிக்கதை)
டிஜிட்டல் மேடை, நவீனதொழில்நுட்ப உபகரணங்களுடன் மேடை வடிவமைப்பு, அலங்காரம்.. என மேடை பேச்சுகளின் உருவகம் முற்றிலும் மாறித்தான் போனது... (அதில் மன் கீ பாத்தை சேர்க்கக்கூடாது)பாஜகவின் அந்த பிரச்சார யுக்தியே மக்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி... வாக்குகளை பாஜக பக்கம் கொண்டு சேர்த்தது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
மோடியும், வெளிநாட்டு பயணமும்
அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் இன்றளவும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் வழக்கமான பாணியை புறந்தள்ளி வெளிநாடு ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் அழகாக அவர் உரையாற்றியது உலகளவில் தற்போது உற்று பார்க்கப்பட்டு உள்ளது.
மாஸ் கிளப்பிய ராகுல்
வழக்கமான ஸ்டைலை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு.. மின்னொளி வெளிச்சத்தில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் அவர் ஆற்றிய உரைதான் டாப் கிளாஸ்... மாஸ் கிளாப்ஸ்... !! உலக வர்த்தக தலைநகர் துபாயில் மகாத்மா காந்தி 150-வது ஆண்டு விழா என்ற தலைப்பிலான பிரம்மாண்ட மக்கள் திரள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். சர்வதேச காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தலைமை தாங்கினார்.
ராகுல் பேச்சு
மக்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தமது உரையில், இந்தியாவின் வளர்ச்சி, தொழிலாளர்களின் பங்களிப்பு, இந்தியர்களின் ஒற்றுமை, அதனை துண்டாட நினைக்கும் சக்திகளை முறியடிப்பது போன்ற சகல விஷயங்களையும் ராகுல் கோடிட்டு காட்ட மறக்கவில்லை. ஒரு கட்டத்தில் ராகுலின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்கள் உற்சாக குரல் எழுப்பி அவையை அதிர வைத்தனர் என்றே சொல்லலாம்... உங்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று ராகுல் குறிப்பிட்ட போது ஆரவாரம் அடங்க சிறிதுநேரம் ஆனதே என்று கூறலாம்.
இந்தியாவின் புதிய பிரதமர்
நிகழ்ச்சியில் பேசிய கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, இம்முறை காங்கிரஸ் தலைவராக துபாய் வந்துள்ள ராகுல் காந்தி அடுத்த முறை இந்தியாவின் பிரதமராக வருவார் என்று கூற... கூட்டத்தின் கரவொலி விண்ணை பிளந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி பேசுகையில் நேருவின் வாரிசு, காந்தியின் கொள்கை வாரிசு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல விரைவில் இந்தியாவின் தலைவராக வர வேண்டுமென நாடே காத்துக் கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டார்.
கவனம் பெற்ற சிறப்பு ஏற்பாடுகள்
இந்த நிகழ்ச்சியை அகில இந்திய வெளிநாடு காங்கிரஸ் அமைப்பான ஓவர்சீஸ் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகங்கள் வாழ் அனைத்து இந்தியர்களின் அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தனர். குறிப்பாக அமீரக திமுக, அமீரக தமிழ்நாடு காங்கிரஸ், கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டர், அமீரக காயிதே மில்லத் பேரவை, தமுமுக, எமிட்டா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் மக்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.
திரண்ட மக்கள்
இந்தியாவின் பாரம்பரிய கலை நிழ்ச்சிகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மைதானம் நிரம்பி வெளியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அரங்கிற்கு உள்ளிருந்த மக்கள் கூட்டம் போல் இருமடங்கு வெளியிலும் கூடியிருந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காததால் அரங்கில் உள்ளே நுழைய முடியாது பல்லாயிரம் பேர் திரும்பிச் செல்லும் அளவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
காங்கிரஸ் ஒருங்கிணைப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹிமான்ஸூ வியாஸ் தலைமையில், ஆர்த்தி கிருஷ்ணா, மகாதேவன், புஷ்பாகரன், கே எம் சி சி தலைவர் இப்ராஹிம் எலைட்டில் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் தலைவர்கள் நிகழ்ச்சிக்காக துபை வந்திருந்தனர்.
ராகுல் காந்தியின் புதிய பாணி
வெளிநாடு ஒன்றில் குறிப்பாக குறிப்பாக துபாயில்... இந்தியர்கள், இந்திய தொழிலாளர்கள் நிறைந்த அப்பகுதியில் ராகுல் காந்திக்கு கிடைத்த வரவேற்பு, பல்லாயிரக்கணக்கானோரின் ஆரவாரம்.. ராகுல் காந்தியின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். மொத்தத்தில்.. துபாய் பயணத்தில்.. புதிய பாணியை முன் வைத்து... மக்களை நெருங்கியுள்ளார் ராகுல் காந்தி என்றே சொல்லலாம்.