துபாய் முகாம்களில் இந்திய தொழிலாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி
துபாய்: துபாயில் இருக்கும் இந்திய தொழிலாளர்கள் முகாமில் உள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 14ம் தேதி துபாய் செல்கிறார். துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் அவர்.
ராகுலின் வருகையையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான செய்தியாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஹிமான்ஸு வியாஸ் கலந்து கொண்டார்.
கே. எம். சி. சி. தலைவர் புத்தூர் ரஹ்மான், ஓவர்சீஸ் காங்கிரஸ் செயலாளர் ஆர்த்தி கிருஷ்ணன், ஓவர்சீஸ் காங்கிரஸ் அமீரக செயலாளர் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர். ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைவருக்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி இலவசம் என்றும், வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை இந்தியத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் தொழிலாளர் முகாம்களுக்கு சென்று அவர்களை சந்தித்து பேசுகிறார் ராகுல் காந்தி. அதன் பிறகு இந்திய தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.