ரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்
துபாய்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தற்போது ரமலான் மாதத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த புனித மாதத்தில் துபாயிலிருந்து அபுதாபிக்கு நடத்தப்படும் சவால் ஓட்டம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சவால் ஓட்டத்திற்கு ரன்மதான் என பெயரிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதமாகும். இம்மாதம் ரம்ஜான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை கடைபிடித்து வருகிறார்கள்
ரமலான் மாதத்தில் 30 நாள் நோன்பு இருப்பது முஸ்லிம்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இவையே ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் முக்கிய நோக்கமாகும்.
தன்னார்வலர் மன்றம் நடத்தும் ரன்மதான்
ரமலான் பண்டிகை அரபு நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன் ஓடுபவர்கள் தன்னார்வலர் மன்றம் சார்பில், இந்த ரமலான் மாதத்தில் வித்தியாசமான ஒரு சவால் ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது ரமலான் மாதம் துவங்கியது முதல், அந்த 30 நாட்களிலும் ஓட வேண்டும் என்பது தான் அது. இந்த 30 நாட்களிலும் நாளொன்றுக்கு குறைந்தது 5 கிமீ முதல் முதல் 16 கிமீ வரை ஓட வேண்டும் என்பதே விதி.
ரன்மதானின் 3 முக்கிய சவால்கள்
இந்த ரன்மதானில் மூன்று முக்கிய சவால்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன அவை என்னென்னவென்றால்
1. இந்த ரன்மதானில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள 30 நாட்களில் எல்லா நாட்களும் தவறாமல் ஓட வேண்டும், 200-க்கும் அதிகமான மசூதிகளை கடந்து சுமார் 250 கிமீ தொலைவு ஓடியிருக்க வேண்டும்.
2. குறிப்பிட்ட அளவு எடையை குறைத்திருக்க வேண்டும்.
3. ரன்மதான் ஓட்டத்தின் மூலம் 7 அமீரகங்களையும் கடந்திருக்க வேண்டும் என்பது தான் அது.
ரன்மதானில் 5 இந்தியர்களில் ஒரு தமிழர்
இந்த ரன்மதான் சவால் ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள நெத்தன்கோடு என்ற ஊரைச் சேர்ந்த, சுப்பிரமணியபிரசாத் என்பவர் பங்கேற்று அசத்தி வருகிறார். இவர் அஜ்மானில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருடன் இந்த சவால் பந்தயத்தில் பங்கேற்றுள்ளவர்களில் மூவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்
பதக்கங்கள் மற்றும் பரிசுகள்
இந்த சவால் ஓட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய பிரசாத், ரமலான் மாத இறுதி நாளுக்குள் சுமார் 210 மசூதிகளை கடந்தாக வேண்டும். நான் ரன்மதானில் கூறப்பட்ட 3 சவால்களையுமே ஏற்றுள்ளேன். ரமலான் மாத இறுதி நாளுக்குள் நான் ஏற்ற சவாலை நிறைவு செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அமீரகத்தை கடக்கும் போதும், ஒவ்வொரு வகையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். ரமலான் மாதத்தின் இறுதி நாளன்று சவால் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கங்கள் பரிசுகள் மற்றும் கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படும் என கூறினார் வெற்றிகரமாக ரன்மதான் சவால் ஓட்டத்தை நிறைவு செய்து பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் சுப்பிரமணிய பிரசாத்.