“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்!
சேக்ரட் கேம்ஸ் இணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்துள்ளார் இந்தியர் ஒருவர்.
துபாய்: சேக்ரட் கேம்ஸ் சீரிசால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகிறார்.
நெட்பிளிக்சில் வெளியான சேக்ரட் கேம்ஸ் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இத்தொடரின் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. முதல் சீசனைப் போலவே இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அத்தொடரின் ஒரு காட்சியில், அந்தத் தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சுலைமான் இஷா என்ற தாதாவின் செல்போன் நம்பர் காட்டப்பட்டது. நிஜத்தில் அது அவருடைய எண் அல்ல. கதைக்காக அப்படிக் காட்டப்பட்டது. ஆனால், அதனை உணராத ரசிகர்கள், சுலைமான் இஷாவிடம் பேச ஆசைப்பட்டு அந்த எண்ணிற்கு அழைக்கத் தொடங்கினர்.
இந்தியர் குழப்பம்
ஆனால் அந்த செல்போன் எண் உண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரான குன்கப்துல்லா (37) என்பவருக்கு சொந்தமானது. கேரளாவைச் சேர்ந்தவரான குன்கப்துல்லா, அங்குள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திடீரென உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்ததால் குன்கப்துல்லா குழப்பமடைந்தார். அவருக்கு வந்த அழைப்புகள் அனைத்தும், "நீங்கள் சுலைமான் இஷா தானே" என கேட்டு அவரை டார்ச்சர் செய்தன.
பேட்டரி காலி
காலையில் 8 மணிக்கு வேலைக்குச் சென்றால் இரவு 7 மணிக்கே வீட்டிற்கு திரும்பும் தனக்கு இப்படி ஒரு தொடர் ஒளிபரப்பாவே தெரியாது எனத் தெரிவித்துள்ளார் குன்கப்துல்லா. ஒரே நாளில் முப்பதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதால், அவரது செல்போன் பேட்டரியும் சீக்கிரம் காலியாகி விடுகிறதாம்.
விரக்தி
இதனால் தூக்கத்தை தொலைத்த அவர், செல்போன் சத்தம் கேட்டாலே ஒரு வித பயஉணர்வு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதோடு, தனது செல்போன் எண்ணையே ரத்து செய்யப் போவதாகவும் அவர் விரக்தியுடன் அறிவித்தார்.
நெட்பிளிக்ஸ் மன்னிப்பு
இந்த விவகாரம் நெட்பிளிக்ஸ் காதுகளுக்கும் சென்றது. அதனைத் தொடர்ந்து உடனடியாக சார்பில் குன்கப்துல்லாவிடம் மன்னிப்பு கோரப்பட்டது. அதில், "தொடர் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே, குன்கப்துல்லா செல்போன் எண்ணை நீக்கிவிட்டோம். இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.