சவுதி vs ரஷ்யா மோதல்... வளைகுடா போருக்கு பிறகு முதல் முறை கடுமையாக சரிந்த கச்சா எண்ணை விலை
துபாய்: வளைகுடா போருக்கு பிறகு முதல் முறையாக, கச்சா எண்ணை விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. 30 சதவீதம் அளவுக்கு எண்ணை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணை ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா. இந்த வரிசையில், ரஷ்யா 2வது இடத்தில் உள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பான-ஒபெக் என்ற அமைப்பின் மூலம், இவை இணைந்து செயல்படுகின்றன.
கச்சா எண்ணை உற்பத்தியை கட்டுப்படுத்துவது போன்ற முடிவுகளை ஒபெக் எடுக்கும். அதிக கச்சா எண்ணையை உற்பத்தி செய்தால் விலை ரொம்பவே குறைந்துவிடும் என்பதால், இவை தங்கள் வசதிக்கு ஏற்ப உற்பத்தியை மேற்கொண்டு வந்தன.
அமெரிக்கா ஆயில்
ஆனால், இங்குதான் அமெரிக்கா அதிரடியாக களம் கண்டது. அந்த நாட்டில் shale (ஷேல்) எண்ணை உற்பத்தியை அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில், எண்ணை உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தியுள்ளது அமெரிக்கா. இதன் மூலம், பல நாடுகளிலும் அமெரிக்க எண்ணைக்கு சந்தை உருவாகிவிட்டது.
இந்த நிலையில்தான், கொரோனா பாதிப்பால், கச்சா எண்ணைக்கான தேவை உலக அளவில் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் எண்ணை விலை சரிவடையத் தொடங்கியது.
உற்பத்தியை குறைக்க திட்டம்
இதை கவனித்த பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பான, ஒபெக், தங்கள் நாடுகள் எண்ணை உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், விலை குறைவதில் இருந்து தப்பிக்கலாம் என முடிவெடுத்தது. ஆனால், இதற்கு ரஷ்யா மட்டும் சம்மதிக்கவில்லை. குறைந்த விலையில், அதிக பெட்ரோலிய பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என கடந்த வெள்ளிக்கிழமை கூறிவிட்டது.
சவுதி-ரஷ்யா வணிக போர்
அமெரிக்கா ஆயில் கம்பெனிகள் தலையெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ரஷ்யா, இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது சவுதிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடும், எண்ணை உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், 10 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணை விலையை கடந்த சனிக்கிழமை குறைத்தது. இது ரஷ்யாவுக்கு எதிரான எண்ணை வர்த்தக போர் என வர்ணிக்கப்படுகிறது.
விலை குறைப்பு ஆயுதம்
ரஷ்யாவின் நட்பு நாடான வெனிசுலா, சவுதியின் எதிரி நாடான ஈரான் ஆகியவற்றுக்கும், சவுதி இவ்வாறு எண்ணை விலையை குறைத்தது, பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் தந்திரத்தை சவுதி கையில் எடுத்துள்ளது. ஆனால், இதனால் எண்ணை வளம் இல்லாத பிற நாடுகளுக்கு ஹேப்பிதான். எப்படியும் ஆயில் விலை குறைந்துவிடும் என்பதால் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கச்சா எண்ணை விலை வீழ்ச்சி
அதேநேரம், ஆயில் விலைகள் இன்று சுமார் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதால், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும் சவுதிக்கும் இடையே, சமாதானம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடப்பதற்குள், எண்ணை விலை சமீபத்தில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துவிடும் என்கிறார்கள் சந்தை நோக்கர்கள்.
விலையை குறைத்த சவுதி
சவுதி அரேபியா ஏப்ரல் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ கச்சா எண்ணை விற்பனை விலையை ஒரு பீப்பாய்க்கு, 6 முதல் 8 டாலர் வரை குறைத்து வர்த்தகப் போருக்கு அரைகூவல் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்கான சீனாவின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவை அது சீர்குலைத்துள்ளது. இத்தாலி, தென் கொரியா போன்ற பிற முக்கிய பொருளாதார நாடுகளுக்கம் கொரோனா பரவியதால், கச்சா எண்ணெய் தேவை குறையும் என்ற கவலை, ஒபெக் நாடுகளுக்கு, அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஆயில் விலை
இன்றைய நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா ப்யூச்சர் ஒரு பீப்பாய் 14.25 டாலர் அல்லது 31.5% குறைந்து 31.02 டாலராக இருந்தது. இது, 1991ம் ஆண்டு ஜனவரி 17, முதல் வளைகுடாப் போரின் தொடக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (டபிள்யூ.டி.ஐ) கச்சா எண்ணை விலை 11.28 டாலர் அல்லது 27.4% குறைந்து ஒரு பீப்பாய் 30 டாலராக இருந்தது.