அபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்
அபுதாபி:ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியின் பெதா சையத் நகரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சூரியனை வணங்கி, பொங்கல் உண்டு தமிழகத்தில் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர்.
நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பலரும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொங்கலை சிறப்பித்து மகிழ்ந்து, மீண்டும் பணியிடத்துக்கோ அல்லது தமது குடியிருப்புகளுக்கோ திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலரோ.. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று காளை அடக்கும் வீர, தீர விளையாட்டை நேரில் கண்டு அகமகிழ்ந்தனர். சிலர் பொங்கல் பண்டிகையை வீட்டில் கொண்டாடிவிட்டு, விடுமுறைறை கழிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்றனர்.
வெளிநாடுகளில் பொங்கல்
எங்கு பார்த்தாலும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க... தமிழகத்தை தாண்டியும் பொங்கல் பண்டிகை உலக நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது. சீனாவில் கோலமிட்டு.. விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
உற்சாகமளித்த தமிழர் திருவிழா
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வண்ண கோலமிட்டு, கரும்புகளை சுவைத்து.. இனிய தமிழில் உரையாட நண்பர்களுடன், உறவினர்களுடனும் அவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
உற்சாகத்தில் திரண்ட தமிழர்கள்
மற்ற நாடுகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில்... அரபு நாடுகளிலும் பொங்கல் பண்டிகை முன் எப்போதும் இல்லாத வகையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் தமிழர்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர். பொங்கலை சுவைத்து.. வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்
குறிப்பாக, அபுதாபியில் உள்ள பெதா சையத் நகரத்தில் உள்ள தமிழர்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய உடையான புடவை, வேட்டியணிந்து தமிழ் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சிறியவர்களும் பொங்கல் கொண்டாட்டம்
பாரம்பரியத்தின் அங்கமாக.. அவர்கள் சூரியனை வழிபட்டு மரபை காத்தனர். ஒன்றிணைந்து இயற்கையை வணங்கி அவர்கள் பொங்கல் திருநாளை உற்சாகமாக கழித்தனர். பெரியவர்கள் மட்டும் அல்லாது சிறியவர்களும் பொங்கலை சுவைத்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
குழுக்களாக பிரிந்த அவர்கள் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தனர். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.