3வது கட்ட சோதனை முடியும் முன்பே.. சீன நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்
துபாய்: சீன அரசு நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி வழங்கியுள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் அமீரகத்தில் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை.
இந்த நிலையில்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தீயாய் பரவும் கொரோனா.. மூச்சு திணறலில் நோயாளிகள்.. கர்நாடகாவில் ஆக்சிஜன் தேவை 4 மடங்கு அதிகரிப்பு
முன்களப் பணியாளர்கள்
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ட்விட்டர் பதிவில் இதுபற்றி கூறுகையில், இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்தான் நோயாளிகளுடன் நெருங்கி பழகும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக டேட்டாப்படி, அமீரகத்தில் இன்று காலை வரை 80, 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 399 பேர் பலியாகி உள்ளனராம்.
சிறிய பக்க விளைவுகள்
சீன தடுப்பூசி இதுவரை, 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தபோதிலும், பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்கவிளைவு இல்லை
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது. அவர்களுக்கும் பெரிதாக எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. எனவேதான், துணிந்து, இந்த முடிவை எடுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
முதல் நாடு ரஷ்யா
இந்த தடுப்பூசி முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் வெற்றிபெற்ற நிலையில், 3வது கட்ட பரிசோதனை 6 வாரங்கள் முன்பாக துவங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடு ரஷ்யா. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாடு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.
இந்தியாவில் தடுப்பூசி
இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சம் என்ற அளவுக்கு, அதிகரித்துள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி தரப்படவில்லை. 2021ம் ஆண்டு துவக்கத்தில்தான், கொரோனா தடுப்பூசி புழக்கத்திற்கு வர வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.