சவுதியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தானை 'கட்' செய்யும் அரபு நாடுகள்.. இந்தியாவுக்கு லாபம்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ட் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. ஒரு வகையில் இது இந்தியாவுக்கு, லாபம்தான் என்கிறார்கள் சர்வதேச விவகாரத்துறை நிபுணர்கள்.
Recommended Video
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் இடையே, பல விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், இப்போது மொத்தமாக சேர்ந்து எதிராக மாறி நிற்கிறது.
பாலஸ்தீன இயக்கத்திற்கு ஆதரவான பாகிஸ்தானியர்கள் சமீபத்தில் எமிரேட்சில் கைது செய்யப்பட்டதால் இந்த உரசல் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது.
கெடுபிடி ஆரம்பம்
பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா நடைமுறையை மேலும் கடினமாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினர், தங்கள் குடியுரிமையை புதுப்பிப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்களாம். அந்த அளவுக்கு விதிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
சிறையில் பாகிஸ்தானியர்கள்
அபுதாபியிலுள்ள அல் ஸ்வெய்ஹான் சிறையில் மட்டும், 5000 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றால் நிலைமையை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமே இந்த கைதிகள் பட்டியலில் கிடையாது. வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களும் இதில் உள்ளனர்.
பேச்சுவார்த்தைகள்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் உறவு மோசமாகிக் கொண்டிருப்பதை சரி செய்ய, அந்த நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் குலாம் தஸ்த்கிர், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கந்தகார் தாக்குதல்
இரு நாட்டு உறவுகள் கசக்க ஆரம்பிக்க முக்கிய காரணம், 2017ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் நடைபெற்ற ஹக்கானி நெட்வொர்க்கின் தீவிரவாத தாக்குதல்தான். இதில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில், இத் தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதை ஐக்கிய அரபு அமீரகம் கண்டுபிடித்தது. ஆனால் பாகிஸ்தானோ, இந்த தாக்குதல் பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறியிருந்தது.
இஸ்ரேலுடன் நட்பு
இந்த நிலையில்தான், இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் உறவு கொள்ள தொடங்கியதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சனம் செய்தது எரியும் தீயில் எண்ணை ஊற்றுவதை போல மாறிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால், இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் இணக்கமாக போக முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுடன் தூதரக உறவை முதல் முறையாக துவங்கியுள்ளது. இது பாகிஸ்தானை கோபப்படுத்தியுள்ளது.
சவுதியுடனும் முறுக்கிக் கொண்ட பாகிஸ்தான்
ஐக்கிய அரபு அமீரகத்துடன் மட்டும் கிடையாது, சவுதி அரேபியாவுடனும், பாகிஸ்தானுக்கு இப்போது நல்ல உறவு இல்லை. ஜம்மு காஷ்மீரில் இந்தியா 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது பற்றி சவுதி தலைமையிலான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் விவாதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு ஏற்கவில்லை. எனவே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா முகமது குரேஷி சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இஸ்லாமிய கூட்டமைப்பு, இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன் என்றார் அவர்.
சவுதி அதிரடி
பாகிஸ்தான் கருத்தால், ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்தது. இதன் மூலம் 3 பில்லியன் டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்
சமீபத்தில், சவூதி அரேபியாவின், ரியாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் "காஷ்மீர் கருப்பு நாள்" (அக்டோபர் 27) நிகழ்ச்சி நடத்த இருந்தது. ஆனால் அப்படி நடத்தக் கூடாது என சவுதி அரசு உத்தரவிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுடனான மோசமான உறவுகள் மேற்கு ஆசிய உறவில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளுடன் பாகிஸ்தான் நட்பாக இருந்ததுதான், பயங்கரவாத குழுக்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த தயங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அரபு நாடுகள்-பாகிஸ்தான் இடையே நட்பு உடைந்துள்ளதால், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.