உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஆண்டு விழா.. அமீரகத்தில் நடத்த அசத்தல் கொண்டாட்டம்!
அமீரகத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் 6ஆம் ஆண்டு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.
துபாய்: அமீரகத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் 6ஆம் ஆண்டு விழா மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக விழா வெகு விமரிசையாக துபாய் தேரா ரமதா ஹோட்டலில் கடந்த அக்டோபர் 25, 2018 மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவினை அமீரக தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையேற்று துவக்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து அமீரக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு. பாலக்குமார் வரவேற்புரையோடு இனிதே துவங்கியது.
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் தலைமை நிலைய செயலாளர் டிரு. P.K. பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், அயலகங்களில் எவ்வாறு மண்றத்தை செவ்வனே நடத்தவேண்டும் என்பன குறித்தும் தெளிவாக அமீரக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். மற்றும் தமிழகத்தில் நற்பணி மன்றம் மேற்கொண்டுவரும் சிறப்பான பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவ்விழாவில் அமீரகத்தில் உள்ள எமிரேட்ஸ்களுக்கும் புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.
மேலும் அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமீரக நற்பணி மன்றத்தை சேர்ந்த கார்த்திக், பாண்டியராஜன், அப்துல் லத்தீப், விஷ்வா, ப்ரவீன் மற்றும் ஜெஸ்ஸி விக்டர் ஆகியோர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். கலந்து கொண்ட அமீரக வாழ் ஆர்வலர்கள் எஸ்.எஸ்.மீரான், ஜெஷிலா ரியாஸ், பாத்திமா, பிலால் அலியார் மற்றும் அபுதாபியில் இருந்து வருகை தந்த பிர்தோஷ் பாஷா மற்றும் அமீரக தி.மு.க.வின் ஷேக் சாலை, ஜாகீர் உஷேன் ஆகியோர் அமீரக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் கூறி அவர்கள் இன்னும் செய்யவேண்டிய செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. P.K.பாபுவிற்கு அமீரக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர். நிகழ்ச்சியினை அமீரக தி.மு.க.வின் திரு. சிம்மபாரதி தொகுத்து வழங்கினார்.