பாகிஸ்தான் நிருபரின் 'அபத்தமான' கேள்வி.. தலையில் அடித்து கொண்டு சிரித்த விராட் கோலி.. பக்கா பதிலடி!
துபாய்: ரோகித் சர்மா பற்றி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் எழுப்பிய ஒரு கேள்வியால், ஆச்சரியமடைந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தனது தலையில் கையால் அடித்துக் கொண்டார்.
Recommended Video
இப்படியும் ஒரு கேள்வி கேட்க முடியுமா என்பதை போல விராட் கோலி இவ்வாறு தலையில் கையை வைத்ததோடு, அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
நேற்று உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே கிடையாது. பாபர் ஆசம் தலைமையிலான அணி முதல் முறையாக இதை செய்துள்ளது.
டிரேட் மார்க் ஷாட்.கள். 'கிங்' என்பதை நிரூபித்த விராட் கோலி.. அணியை மீட்ட தருணம்.. செம பேட்டிங்!
ஏதோ ஒரு வெற்றி கிடைத்து விட்டது
இந்தியாவின் முதல் முகலாய மன்னர் பாபர். அதேபோலத்தான் இந்தியாவுடனான முதல் வெற்றியை கிரிக்கெட்டில் ஈட்டியுள்ளார் இந்த பாபர் என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள். ஓகே.. இத்தனை வருடங்களாக எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தும் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இப்போது ஒரு வெற்றி பெற்றது அவர்கள் பெருமைப்படக் கூடிய விஷயம் இல்லைதான். ஆனால் இத்தனை வருடங்களாக ஒரே ஒரு வெற்றிக்காக காத்துக்கிடந்த அந்த அணி ரசிகர்களை இப்போது கையில் பிடிக்க முடியவில்லை.
பிரஸ் மீட்
ரசிகர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கும் என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை போலும். ஏனெனில் போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் அப்படித்தான் ஒரு எசகு பிசகான கேள்வியை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் முன் வைத்தார்.
நீங்கள் சொல்லுங்கள் சார்
செய்தியாளர் சந்திப்பின்போது, "ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷன் விளையாட வைக்கப்பட்டிருக்கலாமே என்று நினைக்கிறீர்களா" என்று விராட் கோலியை பார்த்து கேள்வி எழுப்பினார் அந்த பத்திரிக்கையாளர். இந்த கேள்வியை கேட்டதும் விராட் மட்டுமல்ல, சக பத்திரிக்கையாளர்களே கூட ஆச்சரியப்பட்டுப்போயினர். கோலிக்கும் அதே எண்ணம்தான் இருந்தது. பதிலளித்த கோலி, இது ரொம்ப தைரியமான கேள்வி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சார்? சிறந்த அணி என்று நான் நினைத்த அணியோடுதான் நான் விளையாடினேன். நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் சொல்லுங்கள்" என்று விராட் கோலி சற்று கோபத்தோடு கேட்டார். அதற்கு பிறகும் அந்த பத்திரிக்கையாளர் விடவில்லை. நீங்கள் சொல்லுங்களேன் என்று விடாப்பிடியாக கேட்டார்.
தலை மீது கை வைத்து சிரிப்பு
இதன் பிறகு பதிலளித்த விராட் கோலி, 20 ஓவர் சர்வதேச போட்டியில் ரோகித் சர்மாவை நீக்கி விடுவீர்களா, நம்பவே முடியவில்லை.. இவ்வாறு கூறிய கோலி தனது தலையில் கையை வைத்துக்கொண்டு குனிந்து சிரித்தார். பிறகு பேட்டியை தொடர்ந்த அவர், உங்களுக்கு சர்ச்சை வேண்டும் என்றால் முன்கூட்டியே, சொல்லுங்கள் சார். அப்படியென்றால் நான் அதற்கேற்ப பதில் சொல்வேன். இவ்வாறு விராட் கோலி பதிலளித்தார்.
சர்ச்சையை ஏற்படுத்த திட்டமா
பாகிஸ்தான் செய்தியாளர் கேட்ட கேள்வி அபத்தமானதா, அல்லது இந்திய அணிக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட கேள்வியா தெரியாது. ஆனால் தலையில் அடித்தபடி நக்கலாக சிரித்தே, அதற்கு பதிலடி கொடுத்து விட்டார் விராட் கோலி என்றுதான் சொல்ல வேண்டும். ரோகித் சர்மா நேற்று முதல் பந்திலேயே டக்அவுட் ஆன நிலையில்தான், இப்படியான கேள்வியை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.