குலதெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிங்க.. துரைமுருகன் உருக்கம்!
சென்னை: இது மு.க.ஸ்டாலின் தலைவராக சந்திக்கும் முதல் பொது தேர்தல் என்பதால் நமக்கு இது கவுரவ பிரச்சனை. ஆகவே வருத்தங்களை மறந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். அதோடு தீவிரமாக உழைப்போம் என்று அவரவர் குலதெய்வம் மீது சத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
நேற்று காலை முழுவதும் அண்ணா அறிவாலயம் ஜே ஜே வென்று இருந்தது. காரணம் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னதான மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்கள் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். 40 தொகுதியிலும் ஸ்டாலினே போட்டியிடுகிறார் என்று கருதி நாம் எல்லாம் தேர்தல் வேலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் முன்னாள் அமைச்சர் நேரு.
மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி
கவலைப்படாதீங்க
தொடர்ந்து பேசிய அவர் கூட்டணி பேசி முடிவு செய்ததில் நானும் ஒருவன். ஆனாலும் என் தொகுதியும் கூட்டணிக்கு செல்கிறது இதற்கெல்லாம் கவலைப்படாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூடவே இன்னொரு பிட்டையும் போட்டு விட்டு சென்றார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாமும் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
நல்லா வேலை பாருங்க
மா.செ. க்கள் பேசி முடித்த பிறகு பேசிய கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஒரு நாளைக்கு 4 டீ மட்டுமே குடித்து விட்டு நாங்கள் எல்லாம் தேர்தல் வேலை செய்திருக்கிறோம் அதற்காக நீங்களும் அதுபோல செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
சத்தியம் பண்ணுங்க
இது தளபதி சந்திக்கும் முதல் பொது தேர்தல் என்பதால் நமக்கு இது கவுரவ பிரச்சனை. ஆகவே வருத்தங்களை மறந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு தீவிரமாக உழைப்போம் என்று அவரவர் குலதெய்வம் மீது சத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
வருத்தம் இருக்கும்
இறுதியாக பேசிய ஸ்டாலின் நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் தங்களுடைய தொகுதிகள் கூட்டணிக்கு சென்று விட்டது குறித்து பேசியபோது உங்களது வருத்தத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கும் தனியாக தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் இது காலத்தின் கட்டாயம். ஆகவேதான் கூட்டணி அமைத்தோம்.
விமர்சனம் வந்திருக்கும்
ஒருவேளை நான் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்திருந்தால் தலைவர் கலைஞர் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாரா? அனைவரையும் அரவணைத்து ஒரு மெகா கூட்டணியை கட்டமைத்திருக்க மாட்டாரா? என்றெல்லாம் விமர்சனங்கள் வந்திருக்கும். தேர்தலில் வெற்றியை பெற்று தரப்போவது நீங்கள்தான். நீங்கள் கூறியவற்றை நானும் உணர்ந்துள்ளேன்.
இடைத் தேர்தல் சதி
21 தொகுதிகளுக்கு நடத்த வேண்டிய தேர்தலை 18 தொகுதிகளுக்கு மட்டும் நடத்துவதில் ஏதோ சதி இருக்கிறது. அதை நீதிமன்றம் வாயிலாக நாம் முறியடிப்போம் என்று கூறிய ஸ்டாலின் தேர்தல் களத்தில் வெற்றியே நம் இலக்கு. அதற்காக கடைசி கட்டத்தில் அத்தனை வியூகங்களையும் நாம் பயன்படுத்துவோம் என்று பேசியுள்ளார்.
வழக்கமாக மற்றவர்கள்தான் கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று பேசுவார்கள் இப்போது ஸ்டாலினே இப்படி பேசியது மா.செ. க்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.