கேரளா வன்முறைக்கு அஞ்சி ஆழியாறு அணை நீர் உரிமையை காவு கொடுத்த தமிழக அரசு- தலையங்கம்
கேரளா வன்முறைக்கு அஞ்சி ஆழியாறு அணை நீர் உரிமையை காவு கொடுத்த தமிழக அரசு- தலையங்கம்
Recommended Video
ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஆண்டுக்கு 7.25 டிஎம்சி நீர் தமிழகம் திறந்துவிட வேண்டும். தமிழகம் தற்போது வரை 5.50 டிஎம்சி நீரை வழங்கிவிட்டது.
அத்துடன் வினாடிக்கு 70 கன அடிநீரை கேரளாவுக்கு திறந்துவிட்டுக் கொண்டும் இருக்கிறது தமிழகம். ஆனால் கேரளாவுக்கு கூடுதல் நீரைத் திறந்துவிட வேண்டும் என கிருஷ்ணன் குட்டி என்கிற இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. போராட்டத்தைத் தூண்டிவிட்டார்.
இதனால் கேரளாவுக்கு செல்லும் தமிழக சரக்கு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு எல்லையில் பதற்றம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் கிருஷ்ணன் குட்டி நிற்கவில்லை.
சிறுவாணி அணையில் இருந்து அதிகப்படியான நீரை அவசர காலத்தில் வெளியேற்றுவது போல அதிகாரிகள் துணையுடன் வெளியேற்றவும் செய்திருக்கிறார். கோவையின் குடிநீர் ஆதாரத்தை பறிக்கிறாராம்.
மேலும் சிறுவாணி அணையில் அதிகப்படியான நீரை திறக்காமல் இருக்க வேண்டும் எனில் ஆழியாறு அணையில் இருந்து கூடுதல் நீரை தமிழகம் திறக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தார் கிருஷ்ணன் குட்டி.
இந்த மிரட்டலுக்கும் வன்முறைக்கும் பணிந்து தமிழக அரசு கேரளாவுக்கு ஆழியாறு அணையில் இருந்து திறந்து விட்டது. அதாவது பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லக் கூடிய 400 கன அடி நீரைத்தான் அப்படியே கேரளாவுக்கு திருப்பிவிட்டிருக்கிறது தமிழகம்.
இதனால் ஆழியாறு-பரம்பிக்குளம் பாசன பகுதியில் 94,000 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. அத்துடன் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் கொந்தளித்து போன விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
கேரளாவின் ஒரு எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்ததற்கு அஞ்சி நமது விவசாயிகளின் உரிமையை காவு கொடுத்திருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் கிஞ்சித்தும் அக்கறையற்ற அரசு என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டு நமது விவசாயிகளை போராட விட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு.