மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது அயோத்தி விவகாரம்- தலையங்கம்
அயோத்தி விவகாரம் தொடர்பான ஒன் இந்தியா தமிழ் தலையங்கம்.
அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் பெரும் சர்ச்சையாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுகள் ஒருவித அச்ச நிலையை உருவாக்க தொடங்கியுள்ளது.
அயோத்தி விவகாரத்தில் சமரச பேச்சுகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் பாபர் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றுகிறோம் என பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்க அயோத்தி விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுத்த தலையிடுவதாக கூறி வருகிறார். ஆனால் அவரது பேட்டி பல்வேறு அச்சங்களையும் எச்சரிக்கையையும் தருகிறது.
'ராமர் கோவில் இடத்தை நாங்கள் எப்படி மாற்ற முடியும்? அது 100 கோடி இந்துக்களின் உணர்வு. மசூதியை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் சிரியாவைப் போல ஒரு உள்நாட்டு யுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என வழக்கத்துக்கு மாறாகவே பேசியுள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
ரவிசங்கரின் இந்த பேச்சுகள் ஒருபுறம் இருக்க, பாஜகவின் முன்னாள் எம்பி ராம்விலாஸ் வேதாந்தியோ வேறு கருத்தை முன்வைக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பிசினஸ்மேன்; அவர் எப்படி அயோத்தி விவகாரத்தில் தலையிடலாம்; தலையிட தடை விதியுங்கள் என சாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தலையீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து வருகின்றன. அயோத்தி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிர்மோனி அகாராவினர், மசூதியை இடம் மாற்றுவதற்கு பணம் கொடுக்கவும் தயார் எனவும் கூறியிருந்தனர்.
தொடர்ச்சியாக அயோத்தி விவகாரத்தில் வாத பிரதிவாதங்கள் எழுவது என்பது இன்னொரு அயோத்தி 'யுத்தத்தை' உருவாக்குகிறார்களோ என்கிற அய்யத்தை எழ வைக்கிறது. அதுவும் லோக்சபா தேர்தல் நடைபெறக் கூடும் நிலையில் அயோத்தி விவகாரம் உக்கிரமாக கிளப்பப்பட்டு வருவது அமைதிக்கு குந்தகம் வருமோ என்பதுதான் சமூக பார்வையாளர்களின் கவலை.