கமல்ஹாசன் தனிக்கட்சி... சிவாஜியின் கலை உலக வாரிசு அரசியலில் "எம்.ஜி.ஆர்" ஆவாரா? - தலையங்கம்
தமிழக அரசியலில் புதிய வரவாக களமிறங்குகிறார் நடிகர் கமல்ஹாசன். மதுரை மண்ணில் இருந்து தமது அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார் கமல்ஹாசன்.
Recommended Video
30 ஆண்டுகாலம் நற்பணி மன்றங்களை நடத்தி வந்தார் கமல்ஹாசன். இந்த நற்பணி மன்றங்களை இப்போது அப்படியே அரசியல் பயணத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் திரைப்படங்களின் வெற்றியின் நாயகர்களாக இருந்த ரசிகர்கள் இப்போது தொண்டர்களாக அவதாரமெடுக்கின்றனர். சினிமாவில் ரசிகர்களின் பலத்தால் கொடிநாட்டிய கமல்ஹாசன் அரசியலில் பொதுமக்களின் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டும்.
எம்ஜிஆர், சீமான், விஜயகாந்த் என பலரும் மதுரை மண்ணில் இருந்துதான் அரசியல் பயணத்தை தொடங்கினர். இந்த வரிசையில் மதுரையில் அரசியல் கட்சியை அறிமுகம் செய்கிறார் கமல்.
திரை உலகில் பெற்ற ஒளிவீச்சை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவோம் என்பதாக கமல்ஹாசனின் பயணம் இருக்காது என்பதை பலமுறை அவரே சுட்டியும் காட்டியுள்ளார். தாம் கொள்கைகளை வகுத்து அதன்வழியே பயணிப்பேன் என்பதில் மிகவும் திடமாகவும் இருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் கட்சியை அறிவிக்கும் முன்னரே யாருடன் கூட்டணி வைப்பார் என்கிற ஆரூடங்கள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் என் கொள்கைகளை முன்வைக்கிறேன்...அதனை புரிந்து கொண்டவர்களோடு கூட்டணி குறித்து யோசிக்கலாம் என நிதானித்து தெளிவான சிந்தனையையே வெளிப்படுத்தி வருகிறார் கமல். தமது கொள்கைகளில் திராவிடம் இருக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடும் கமல்ஹாசன் நிச்சயம் காவி அரசியல் இல்லை என்பதையும் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன் நண்பர் ரஜினிகாந்தின் அரசியல் காவி அரசியலாக இருக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையையுமே கமல் பகிரங்கமாகவே கூறியுள்ளார். கமல்ஹாசனின் கொள்கைகள் தமிழ் மண் சார்ந்ததாக தமிழ் மக்கள் சார்ந்ததாகவே இருக்கும் என்பதைத்தான் அவரது இதுநாள் வரையிலான பேச்சுகள் வெளிப்படுத்தி உள்ளன.
கொள்கை சார்ந்த அரசியல் முன்னெடுப்பு என்பது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று. அப்படி கொள்கை சார்ந்த முன்னெடுப்பு இல்லாத, தமிழ் மண்சார்ந்து அரசியலை முன்வைக்காத பெரும்பாலான கட்சிகள் கால ஓட்டத்தில் காணாமல் போயுள்ளன. கொள்கை சார்ந்து முன்வைத்தவர்களில் சிலர் மக்கள் ஆதரவை திரட்ட முடியாமல் தோற்றும் போயுள்ளனர்.
திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வாரிசான கமல்ஹாசன் வெளியிடப் போகும் கொள்கைகளும் வகுக்கப் போகும் வியூகங்களும் அரசியல் உலகில் இன்னொரு எம்ஜிஆராவாரா? என்பதை தமிழகம் இனி தீர்மானிக்கும்!