மதவாத சக்திகள் எவருமே நெருங்க முடியாத பெருநெருப்பு "தந்தை பெரியார்" - தலையங்கம்
Recommended Video
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஈ.வெ. ராமசாமி நாயக்கர்" எனும் செல்வந்தர் காங்கிரஸ் பேரியக்கத்தில் பணிபுரிகிறார். பெரும் செல்வந்தரின் மகன். அவரது மொழிகளில் சொல்வதானால் இளம்பிராயத்தில் மைனராக அலைந்து திரிந்தவர். சமூக வேறுபாடுகளைக் கண்டு மனம் கொந்தளிக்கிறார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து கொண்டே கல்வி, வேலை வாய்ப்பில் வகுப்பு வாரி பிரதிநித்துவத்துக்காக போராடுகிறார். காங்கிரஸ் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் 1925-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைக் காண்கிறார்.
ஜாதிய அடிப்படையிலான சமூக வேறுபாடுகளுக்கு காரணமான அனைத்தையும் பெரியார் கண்டித்தார். விமர்சித்தார். எதிர்த்தார்.
ஜாதியை மதத்தை ஒழித்து நாத்திகனாக, மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரனான மனிதர்கள் வாழ பிரசாரம் செய்தார். தம் பெயருக்கு பின்னால் போட்டிருந்த நாயக்கர் ஜாதி பட்டத்தை பெரியாரும் தூக்கி எறிந்தார். அவரை பின்பற்றியோரும் தூக்கி எறிந்தனர்.
இதை தாம் நடத்தி வந்த குடி அரசு ஏட்டில் சாதிப் பட்டத்தைத் துறந்தவர்கள் என பதிவும் செய்தார். சமூகத்தின் சரிபாதி பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உள்ளிட்ட புரட்சிகர தீர்மானங்களை அம்மாநாட்டில் நிறைவேற்றினார்.
அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டன. அரசாங்கத்தில் இருந்த நீதிக்கட்சி மூலமாக இடஒதுக்கீடு, கோவில் நுழைவு என சாத்தியமான அத்தனையையும் சாத்தியப்படுத்தினார் தந்தை பெரியார்.
அதுவரை ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை மக்கள் தங்களது சமூக விடுதலைக்கான பயணத்தில் மானமும் அறிவும் உள்ளவர்களாக பெரியாரின் தலைமையை ஏற்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் பெரியார் இயக்கத்தில் சமமாக பங்காற்றினார். குடும்பம் குடும்பமாக பெரியாரை ஏற்று அவர் வழியை பின்பற்றினர்.
ஒருகட்டத்தில் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். அப்போதுதான் காஞ்சிபுரத்து பட்டதாரி சி.என். அண்ணாதுரை, பெரியாருடன் கை கோர்க்கிறார். பெரியாரின் போர்ப்படை தளபதியாகிறார் அண்ணா. 1938-ம் ஆண்டு முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் தமிழ் மண்ணில் நடக்கிறது. தந்தை பெரியார் தலைமை வகிக்கிறார். தாளமுத்து. நடராசன் ஆகியோர் முதல் களப் பலியாகின்றனர். ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர்.
அந்த இந்தி எதிர்ப்புப் போரில்தான் ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே என 13 வயது சிறுவனாக முழங்கியவர் கருணாநிதி. இப்படித்தான் பெரியார் தலைமையில் ஒட்டுமொத்த தமிழகமே அணிதிரண்டது. இந்த நீதிக்கட்சிதான் 1944-ம் ஆண்டு திராவிடர் கழகமானது. கல்வி, வேலைவாய்ப்பில் ஜாதி எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம்- வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்பதும் ஜாதிய கட்டமைப்பை தகர்க்க அதைத் தாங்கிப் பிடிக்கிற அத்தனையையும் தகர்ப்பதும் திராவிட பேரியக்கத்தின் அடிநாதமாக இருந்தது.
தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் தலையெடுத்த பின்னர்தான் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கூழை கும்பிட்டு போட்டிருந்த சமூகங்கள் தோளிலே துண்டைப் போட்டு வலம் வரத் தொடங்கினோம். குறிபிட்ட இனத்தவர் வீடுகளில் மட்டுமே இருந்த புத்தகங்கள் ஏடுகள் நம் திண்ணைகளைத் தாண்டி நம் கைகளுக்கும் வந்தது. இந்திய விடுதலைக்கு முன்னரே தனி தமிழ்நாடு எனும் அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவை அண்ணா தொடங்கினார். ஆனாலும் பெரியாரின் கொள்கைகளைத்தான் அண்ணா பேசினார். தேர்தல் அரசியலில் பங்கேற்று ஆட்சி அமைத்தாலும் பெரியாரின் கொள்கைகளையே திமுக தமது கொள்கையாக கொண்டது.
இதன் கிளைகள்தான் இன்றுள்ள பாஜக தவிர்த்த அத்தனை கட்சிகளும். ஆனால் தம் வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியல் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தந்தை பெரியார். தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை தூக்கி எறிந்தவராக இருந்தார்.
சிறைக்கு அஞ்சாத சிங்கமாக இருந்தார். இன்று நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பேராசான். இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் தந்தை பெரியார். இதற்காக அவர் நடத்திய போராட்டங்கள், நம் அப்பாக்களும் தாத்தாக்களும் செய்த தியாகங்கள் ஏராளம். அந்த இடஒதுக்கீடுதான் இன்று தமிழினமே கல்வியின் முன்னோடிகளாக இருக்க அடிப்படை.
அதனால்தான் தமிழினம் அவரை தந்தை நிலையில் வைத்து போற்றுகிறது... கொண்டாடுகிறது..
பெரியார் வாழ்ந்த வயது 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள்.
பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு.
பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700.
பெரியார் உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம்.
பெரியாரின் சொற்பொழிவுகளை பதிவுசெய்து ஒலிபரப்பினால் - 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலிக்கும்
இந்த மண்ணில் நிலைக்க விரும்பும் அரசியல் கட்சிகளின் பேராசான் அடிநாதம் தந்தை பெரியார். அதனால்தான் பெரியார் மீது கை வைத்தால் தமிழகமே கொந்தளிக்கிறது.
வைகோ போன்ற ஆகப் பெரும் தலைவர்களே அரிவாளை ஓங்குகிறார்கள்..
சுப.வீ போன்ற சாத்வீகமானவர்கள் தலைமையிலே பல்லாயிரம் பேர் மறியலுக்காக வீதிக்கு வருகிறார்கள்...
வேறுவழியே இல்லாமல் எ.ராஜாசாக்கள் சரணாகதி அடைகின்றனர்.