முதல் முறையாக ஈரான் செல்கிறார் மோடி- சபாஹர் துறைமுகம் குறித்து முக்கிய ஆலோசனை!
டெல்லி: நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ந் தேதி ஈரானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் - சீனாவுக்கு சவால்விடும் வகையில் ஈரானின் சபாஹர் துறைமுக மேம்பாடு குறித்த பேச்சுகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
ஈரானிடம் இருந்து பெருமளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில் சீனாவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்கு.
ஈரான் மீதான சர்வதேச பொருளாதார தடை இருந்த போது கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா சற்று குறைத்துக் கொண்டது. பின்னர் ஈரான் மீதான தடை விலக்கப்பட்ட நிலையில் முழு அளவிலான இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது., ஏப்ரல் 1-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்களை ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
2 நாள் பயணம்
கடந்த மாதம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஈரான் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 22-ந் தேதி ஈரான் செல்கிறார். இந்த பயணத்தின் போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் நட்புறவு தொடர்பாக அந்நாட்டின் அதிபருடன் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவுக்கு செக்
ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இந்த பயணத்தில் முதன்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனா ஏற்கனவே சீரமைத்து தம்முடைய பயன்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த கவ்தார் துறைமுகத்துக்கு மிக அருகேதான் ஈரானின் சபாஹர் துறைமுகம் அமைந்துள்ளது.
அரபிக் கடல் ஆதிக்கம்
இத்துறைமுகத்தை மேம்படுத்தினால் ஆப்கானிஸ்தானுடான இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டில் பாகிஸ்தான் தலையீடு இல்லாமல் எளிதாக மேற்கொள்ள முடியும். அரபிக் கடலில் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை பயன்படுத்தி சீனா நிலை கொண்டிருப்பது போல ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்த முடியும்.
கடல்வழி எரிவாயு குழாய்
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியே குழாய்கள் மூலம் இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் பாகிஸ்தான் உதவியில்லாமல் கடல்வழியே குழாய்கள் மூலம் இந்தியாவுக்கு எரிவாயு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆகையால் பிரதமர் மோடியின் இப்பயணத்தின் போது சபாஹர் துறைமுக மேம்பாடு குறித்த பேச்சுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என்கின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.