For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனநாயகத்திற்கு சவால்!- தலையங்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ

    சென்னை: திரிபுராவில் ஆட்சிக்கு வந்த கையோடு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றி, பாஜகவினர் அராஜகத்தில் இறங்கியுள்ளனர். பதவியேற்கும் முன்பே அங்கு கலவரம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டுள்ளது.

    சிலை அகற்றும் கலாச்சாரம் பாஜகவுக்கு புதிது கிடையாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதே அது உலக அளவில் பட்டவர்த்தனமானதுதான். ஒற்றை கலாச்சாரத்தின்கீழ் அத்தனையையும் கொண்டுவர வேண்டும் என்ற தீராத வேட்கைக்கு தடையாக இருப்பது இதுபோன்ற அடையாளங்கள் என்பதுதான் அவர்கள் ஆவேசத்திற்கு காரணம்.

    The razing of Lenin's statue is shameful for the Indian democracy

    தாஜ்மகாலையே இடிக்க வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்ததும் இதே பின்னணியில்தான். தர்க்க ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ மாற்றுக் கருத்தை எதிர்க்க முடியாத கோழைகளின் செயல்தான், உருவகங்களை இல்லாமல் ஆக்குவது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

    "குழந்தைகளுக்கு 4 வருடங்கள், கற்றுக்கொடுக்க அவகாசம் கொடுங்கள். நான் அவர்களிடம் விதைத்த விதையை யாராலும் வெட்டி வீழ்த்த முடியாது" என்றவர் லெனின். விதையை வீழ்த்த முடியாது என்பதால்தான் அவரது சிலையை வீழ்த்தியுள்ளனர் போலும்.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கை ஓங்கியபோது, பீரங்கி வைத்து பழங்கால புத்த சிலைகளை இடித்ததற்கும், பாஜகவினரின் சிலை தகர்ப்பு கொள்கைக்கும் நடுவே என்ன வித்தியாசம் உள்ளது என்று நாளைய வரலாறு அவர்களை பார்த்து கேட்க கூடும்.

    சிலை தகர்ப்பு என்பது மக்களாட்சியில் உள்ளோருக்கான மனநிலை கிடையாது. அது மன்னராட்சி மனநிலை. பிற நாடுகளை படையெடுத்து வென்று அந்த நாட்டின் கலாச்சார பிரதிபலிப்புகளை தீக்கிரையாக்குவதும், ஊரையே பொசுக்குவதும் அதன் ஒரு அம்சம். உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும், பாஜகவும் அதையே செய்வது, நாம் வாழ்வது மன்னராட்சியிலா, மக்களாட்சியிலா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த நிலை நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இதோ ஒருவர் பெரியார் சிலையை அகற்றுவோம் என்றார். அடுத்ததாக ஒருவர், நேரு சிலையை அகற்றுவோம் என்று கூட சொல்வார். அரசின் பல திட்டங்களில் இருந்து நேரு பெயரை அகற்றியவர்களுக்கு, இதைச் சொல்ல அதிக நேரம் தேவைப்படாது. ஆனால் இவர்களே, இன்னொரு பக்கம் பல ஆயிரம் கோடி செலவில் பட்டேலுக்கு சிலை அமைப்பார்கள்.

    இவர்களுக்கு சிலை பிரச்சினை கிடையாது. சிலையாக காட்சியளிப்பவர், முதலாளித்துவம், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவராக இருந்துவிட கூடாது. சுருக்கமாக சொன்னால் இவர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் எல்லோருமே இந்தியாவுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுவார்கள்.

    சிலை அகற்றுவதை தடுக்க ஒரு கூட்டமும், அகற்ற ஒரு கூட்டமும் நடு ரோட்டில் மோதி மண்டை உடைந்து ரத்த ஆறு ஓட கூடும். அந்த ரத்தத்தின் கறை, வேலைவாய்ப்பின்மை, வங்கி சுரண்டல்கள், வரிக்கு மேல் வரி விதிப்பால் வாடும் மக்களின் கவனத்தை, மறைத்து செல்ல கூடும். அதை ஒரு தரப்பு விரும்பவும் கூடும். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக உள்ள ஒரு தேசத்தில், சிலையை அகற்றவும், நிறுவவும் மாறி மாறி போராட்டம் நடக்க கூடும்.

    ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா என மார் தட்டிக்கொண்டே மறுபக்கம் சிலைக்காக சண்டையிட்டுக்கொண்டிருப்போம். இங்கு நடைபெற்றது மாநிலத்திற்கான தேர்தல், போர் கிடையாது. வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தில் மாறி மாறி வரும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. 21 மாநிலங்களில் தங்கள் கொடி பறப்பதால் ஏற்பட்ட களிப்பாக இருக்கலாம், மயக்கமாகவும் அது மாறியிருக்கலாம். மக்களாட்சியில் மயக்கத்தை தெளிய வைக்க மக்களுக்கு அதிக நாட்கள் தேவைப்படாது!

    English summary
    The razing of Lenin's statue is shameful for the Indian democracy. It is a reflection of the hatred and intolerance that underline the ideology of the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X