வீட்டையே உடைத்து அரிசி தேடிய யானை.. கிலியின் பிடியில் கோவை மலைவாழ்மக்கள்
வீட்டை உடைத்து அரிசி தேடிய யானையால் மக்கள் பயத்தில் உள்ளனர்.
கோவை: வீட்டின் மேற்கூரையை உடைத்து அரிசி தேடிய யானையால் கூட்டுப்புலிக்காடு மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியில் இருக்கும் பகுதி ஆனைகட்டி. இங்குள்ள மலைவாழ் கிராமம் கூட்டுப்புலிக்காடு என்பது. நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்கள் விவசாய கூலிகளாகவும், செங்கல் சூளைக்கும் வேலைக்கு செல்கின்றனர். வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல கடந்த மாதமும் ஒரு அரிசி வியாபாரியின் கடைக்குள் சென்ற யானை அங்கிருந்த அரிசி மூட்டைகளை உருட்டி அரிசியை தின்று அரிசி மூட்டைகளையே காலி செய்துவிட்டது.
இந்நிலையில் அதே யானை இன்று விடியற்காலை சாலை வழியாக வந்த வந்தது. நேராக வெள்ளியங்கிரி என்பவரது வீட்டின் அருகே வந்த யானை, வீட்டினை உடைக்க தொடங்கியது. இதில் மேல்கூரை முற்றிலும் உடைந்து விழுந்தது. அப்போது வீட்டினுள் அரிசி இருக்கிறதா என யானை தேடியது.
யானை வீட்டின் மேல்கூரையை உடைத்துள்ள நேரம், வீட்டினுள் இருந்தவர்கள் அனைவரும் உள் அறைக்குள் தூங்கி கொண்டிருந்தனர். அதனால் அனைவரும் உயிர்பிழைத்தனர். வீடு இடிபடும் சத்தம் கேட்டதும் அவர்கள் எழுந்து கூச்சலிட்டனர்.
அதனால் பொதுமக்கள் அனைவரும் வெள்ளியங்கிரி வீட்டின் முன் திரண்டு அந்த யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். தற்போது காடுகளில் நல்ல மழை பெய்து யானைக்கு தேவையான உணவுகள் கிடைத்தபோதும் அரிசியை தேடி வந்துள்ளது மலைவாழ் மக்களிடம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.