ராத்திரி 11 மணி.. பஸ்ஸை நிறுத்தி பயணிகளுடன் பெண்ணுக்கு காவல் இருந்த டிரைவர், நடத்துனர்.. நெகிழ்ச்சி
எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் நள்ளிரவில் உறவினர் வர தாமதம் ஆனநிலையில் பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு காவலாக கேரள அரசு பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணணூரைச் சேர்ந்தவர் எல்சினா. இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க எர்ணாகுளத்திற்கு ஆய்வுப்பணிக்கு வந்தார்.
இதையடுத்து பெங்களூரிலிருந்து மதுரை வந்த எல்சினா, அங்கு எர்ணாகுளம் செல்லும் பேருந்தில் ஏறினார். எர்ணாகுளத்துக்கு வர தாமதமாகும் என்பதால் தன்னை அழைத்து செல்லும் படி உறவினருக்கு எல்சினா தகவல் கொடுத்தார்.
வெறும் 22 வயசுதான்.. ஆனால் பிரியங்கா செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!
கடைகள் மூடல்
இதனிடையே எர்ணாகுளத்தில் மாணவி இறங்க வேண்டிய இடத்துக்கு இரவு 11 மணிக்கு பேருந்து வந்தடைந்தது. அப்போது அங்கிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அப்பகுதியே அமைதியாக இருந்தது.
மழை குறைந்தது
மேலும் அப்பகுதியில் மழை கொட்டியது. அப்போது எல்சினா, அவரது உறவினரை தொடர்பு கொண்டார். அதற்கு அவர் மழை நன்றாக பெய்து வருவதால் மழை குறைந்தவுடன் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
மனமில்லை
உறவினர் வர தாமதமாகும் என்ற விவகாரத்தை அந்த பெண் டிரைவர், கன்டக்டரிடம் தெரிவித்தார். நடுராத்திரியில் ஆள் அரவமில்லாத இடத்தில் அந்த பெண்ணை விட்டு செல்ல இருவருக்கும் மனமில்லை. உடனே இருவரும் பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் தெரிவித்தனர்.
பயணிகள்
பெண்ணின் உறவினர் வரும் வரை காத்திருந்து அந்த பெண்ணை ஒப்படைத்துவிட்டு செல்லலாமா என கேட்டனர். அதற்கு அந்த பயணிகளும் ஒப்புக் கொண்டனர். பின்னர் அந்த பெண்ணை அவரது உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு டிரைவர், கன்டக்டர், பயணிகள் சென்றனர்.
பாராட்டு
இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்த சம்பவத்துக்கு பூஞ்சார் எம்எல்ஏ ஜார்ஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். எனது தொகுதியில் மாணவிக்கு பாதுகாப்பாக இருந்த பேருந்து கன்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோரை பாராட்டுகிறேன் என்றார்.
வரும் முன்னர் தடுப்பு
சிறு குழந்தையை கூட விடாமல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நிகழும் இந்த உலகில், ஒரு இளம்பெண்ணுக்காக காவலாக இருந்த கன்டக்டர், டிரைவர் ஆகியோரை நாமும் பாராட்டுவோம். மேலும் இருவரின் கோரிக்கையை ஏற்ற பயணிகளின் செயல் மனிதநேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கான சான்றாகிறது. பெண்ணை தனியாக விட்டுவிட்டு பின்னர் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் வேதனைப்படுவதற்கு பதிலாக இவர்கள் ஆபத்து வருமுன்னரே தடுத்துள்ளனர்.