திம்பம் கொண்டை ஊசி வளைவில் கஷ்டப்பட்டு ஏறிய வாகனங்கள்.. குறுக்கே 10 அடி நீள மலைப்பாம்பு- திக் வீடியோ
ஈரோடு: திம்பம் மலைப் பாதையை 10 அடி நீள மலைப்பாம்பு கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளை திடுக்கிட வைத்துள்ளது.
Recommended Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலத்தை இணைக்கும், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
திகில் பாதை
இந்த மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு ரொம்பவே தலைவலி கொடுக்க கூடிய பாதையாகும். கொண்டை ஊசி வளைவுகள் ஆபத்தானவை என்பதோடு, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அவ்வப்போது இந்த ரூட்டை கடந்து செல்லும் என்பதும் திகிலுக்கு காரணம்.
மருந்து வாகனங்கள்
தற்போது முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் இரு மாநிலங்களுக்கிடையே அனுமதிக்கப்படுகிறது.
10 அடி பாம்பு
இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் சரக்கு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 அடி நீள மலைப்பாம்பு திம்பம் மலைப்பாதையை கடப்பதற்காக மெதுவாக ஊர்ந்து சென்றது. சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்லும்வரை காத்திருந்து பாம்புக்கு வழிவிட்டனர்.
5 நிமிடங்கள் கடந்தது
சுமார் ஐந்து நிமிடம் மலைப்பாம்பு சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்று வனப்பகுதிக்கு சென்று மறைந்தபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் பாம்பை பார்த்து நிறுத்துவிட்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.