தூக்க கலக்கம்.. எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 4 தொழிலாளர்கள் பலி.. ஈரோட்டில்!
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
ஈரோடு: லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டதில் பஞ்சாலை ஊழியர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் பஞ்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவு வேலை முடித்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர். காரை கோவிந்தராஜன் ஓட்டினார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. தாறுமாறாக இங்குமங்கும் ஓடிய கார், எதிரே காபி கொட்டை ஏற்றி வந்துகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
பல முறை சொல்லியாச்சு... மணி திருந்தலை.. மரக்கட்டையாலேயே போட்டு தள்ளிய மனைவி வள்ளி!
இந்த விபத்தில் தங்கப்பாண்டியன், சங்கர், ஜெய்கணேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால், வீரராகவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளதாக முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர்.