ஈரோட்டிலும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச முயற்சி...ஒருவர் கைது!!
ஈரோடு: ஈரோட்டில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசுவதற்கு முயற்சித்த இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசுவதற்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்தார். அவர் பெரியார் சிலை நோக்கி செல்வதை அங்கிருந்த போலீசார் காண நேர்ந்தது. உடனே விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து நடக்கவிருந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு நடக்கவிருந்த சம்பவம் தடுக்கப்பட்டது.
தமிழகத்தில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக கடவுள் ரீதியிலான சச்சரவுகள், பெரியார் சிலை மீதான காவிச் சாயம் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் பெயர் பிரகாஷ் என்பதும் அவருக்கு வயது 45 என்பதும் தெரிய வந்துள்ளது.
மம்மி வந்தாச்சு.. இறங்கி குத்து இப்படி குத்து.. நீயும் கொஞ்சம் வந்து குத்து.. தெருவில் மகள் டான்ஸ்
கறுப்பர் கூட்டம் யூ - டியூப்
கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் யூ - டியூப்பில் இழிவுபடுத்தி இருந்தது. இதையடுத்து இந்த சேனலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்த சம்பவத்தில் சேனல் உரிமையாளர் செந்தில்வாசன் (49) மற்றும் வீடியோவில் விமர்சித்து இருந்த சுரேந்திரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு சுரேந்திரன் அனுப்பப்பட்டார்.
கறுப்பர் கூட்டம் சேனல்
முன்னதாக, சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் சுமார் 100 பேர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டனர். தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே, தி.நகரில் உள்ள சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனலின் அலுவலகத்துக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.
சுந்தராபுரம் பெரியார் சிலை
கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது கடந்த வார இறுதியில் காவிச் சாயம் வீசப்பட்டது. இதை அறிந்த திமுக, திக, விசிக, மதிமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அங்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.
|
பாரத் சேனா அருண்கிருஷ்ணன்
இதையடுத்து, போத்தனூர் காவல் நிலையத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியதாக பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண்கிருஷ்ணன் சரணடைந்துள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மு.க. ஸ்டாலின் கண்டனம்
இந்த சம்பவத்துக்கு , திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
ஈரோட்டில் முதல்வர் உறுதி
ஈரோட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதே ஈரோட்டில் தான் இன்று இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்ற முயற்சித்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.