அதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்
ஈரோடு: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருவதாக தெரிவித்தார்
ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதை குறிப்பிட்டு பேசிய தினகரன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? என்று கேள்வி எழுப்பினார்.
விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதற்கு தினகரன் ஆதரவு தெரிவித்தார். விவசாயிகளுக்கு எப்போதும் உற்ற தோழனாகவே இருப்போம் என்று தெரிவித்தார்.
பட்ஜெட்டில் நீர்நிலைகளை தூர்வார 300 கோடி ஒதுக்கியும் எந்த பிரோஜனமும் இல்லை என்று கூறிய அவர், மேட்டூர் அணை நீர் கடலில் கலந்தது தான் மிச்சம் என்றார். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ, அதை எல்லாவற்றையும் எடப்பாடி அரசு ஆதரிப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதப்பதாகவும், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் தினகரன் கூறினார்.