முதுமலையில் 28 யானைகளுக்கும்.. கொரோனா நெகட்டிவ்... நிம்மதியில் பாகன்கள்
ஈரோடு: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் எந்த யானைக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உலகையே கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றன.
மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஆண்டே பூனை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாய் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் யானைகளின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் முதுமலை முகாமில் உள்ள எந்த யானைக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.