2ஜி ஊழல்.. தமிழர்களுக்கு அவப் பெயரை தேடித் தந்தது திமுக- காங்... ஈரோட்டில் அமித் ஷா கொட்டு
ஈரோடு: 2ஜி ஊழலால் இந்தியா முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது திமுக என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இன்று ஈரோட்டில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது திமுக-காங்கிரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
குறிப்பாக 2ஜியை பற்றியே நீண்ட நேரம் தனது உரையில் தெரிவித்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது வரிசையான குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனார். அப்போது அமித்ஷா சொன்னதாவது:
அவப்பெயர்
"திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல. ஊழலுக்கான கூட்டணி ஆகும். 2ஜி ஊழல் மூலம் தமிழர்களுக்கும் இவர்கள் மிகபெரிய அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
துரோகம்
ஆட்சியிலிருந்தபோது திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது? மத்தியில் திமுக - காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது 12 லட்ச கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார்கள். ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு இப்படி ஒரு துரோகத்தை ஏன் செய்தார்கள் என மு.க.ஸ்டாலின் மக்களிடம் சொல்ல வேண்டும்.
ஏளனம் செய்கிறார்
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நாங்கள் அறிவித்தால், இதனை ராகுல்காந்தி ஏளனம் செய்கிறார். விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் 53 ஆயிரம் கோடி ரூபாய் விலக்கு அளித்தது. ஆனால் பாஜக 7.5 கோடி ரூபாய் விலக்கு அளித்துள்ளோம்.
தேவைகள் என்ன?
திமுக கூட்டணி ஜனநாயக முறையில் அமைந்த கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி மட்டுமே ஜனநாயக முறையில் அமைந்த கூட்டணி. மக்களின் விருப்பம், தேவைகள் என்னவோ அதை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும்.
குடும்பம் சார்ந்த கூட்டணி
பாஜக அரசு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் என்ன கொடுத்தீர்கள். 2ஜி ஊழலைத்தான் கொடுத்தீர்கள். கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து உங்கள் வீட்டுக்குத்தான் தந்தீர்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி குடும்பம் சார்ந்த கூட்டணி. அதனால் மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும் அமைந்துவிட்டால், இந்த நாடு முழுவதும் ஊழல் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.