மோடி தலைமையில் மீண்டும் பாஜகதான் வெல்லும்.. பெரியார் மண்ணிலிருந்து அமித் ஷா முழக்கம்
2019-ல் மோடி தலைமையில் ஆட்சி அமையும்.. அமித்ஷா உரை
ஈரோடு: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று 2019ல் மோடி தலைமையில் தான் மீண்டும் ஆட்சி அமையும் என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி குடும்பம் சார்ந்த கூட்டணி என்றும் அமித்ஷா கடுமையாக விமர்சித்து உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போவதால், அதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள தேசிய பாஜக தலைவர் அமித்ஷா ஈரோடு வந்தார். சித்தோடு பகுதியில் நடைபெற்ற நெசவாளர் அணி கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றியதாவது:
"கடந்த 21 ஆண்டுக்கு முன்பாக கோவையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடைபெற்றது. குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சிரம் தாழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
திமுக-காங்கிரஸ்
திமுகவினர் மத்தியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து வீட்டுக்குத்தான் கொடுத்தீர்கள். மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நாடு முழுவதும் ஊழல்தான் பெருக்கெடுத்து ஓடும். பாஜக அரசு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு திமுக செய்யாத பலவற்றை மத்தியில் பாஜக தலைமையிலான அரசு செய்திருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி
மீனவர்களின் நலனில் பிரதமர் மோடி அக்கறை கொண்டு தனி அமைச்சரகம் அமைத்துள்ளார். திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு கீழ் வந்துள்ளன. கொங்குமண்டலத்தில் இரண்டு எண்ணெய் உற்பத்தியை பெருக்கி உள்ளோம். 200 கோடி செலவில் திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளோம்.
இலவச எரிவாயு
40 லட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்துள்ளோம். 60 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு விலக்கு அளித்துள்ளோம். தனி நபர் வருமானம் 5 லட்சத்திற்கு உள் இருப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு கொடுத்துள்ளோம். இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தில் 28 லட்ச குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
தேர்தல் அறிக்கை
2019ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனைத் தேர்தல் அறிக்கையிலேயே இணைக்க உள்ளோம்.
மீண்டும் மோடி
பாஜக மட்டும் தான் தொண்டர்களை வைத்து வெற்றி பெறும் கட்சி. மற்றவை எல்லாம் தலைவர்களை வைத்து வெற்றி பெறும் கட்சிகள்தான். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமையும்" என்றார். இறுதியாக, "மீண்டும் மோடி ஆட்சி" என தொண்டர்களை கோஷம் போட சொல்லி தனது உரையை முடித்தார் அமித்ஷா.