பாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி
சத்தியமங்கலம்: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழகம்- கர்நாடகா இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை முதல் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகள் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி இன்று காலை முதல் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் சரக்கு வாகனங்களும் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. பாரத் பந்த் காரணமாக இரு மாநில எல்லையில் வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.